பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 356, நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு!
சென்செக்ஸ் 355.90 புள்ளிகள் உயர்ந்து 77,269.40 புள்ளிகளாகவும், நிஃப்டி 121.75 புள்ளிகள் உயர்ந்து 24,119.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: முன்னணி நிறுவனங்களின் பங்குகளை, முதலீட்டாளர்கள் வாங்கியதாலும், மாநிலத் தேர்தல் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக அமைந்ததாலும், பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 356 புள்ளிகள் மீண்ட நிலையில், நிஃப்டி குறியீடும் 24,100 புள்ளிகளுக்கு மேல் சென்று நிலைபெற்றது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 997.25 புள்ளிகள் உயர்ந்து 77,910.75 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 355.90 புள்ளிகள் உயர்ந்து 77,269.40 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 121.75 புள்ளிகள் உயர்ந்து 24,119.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் & டூப்ரோ, எடர்னல் மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபறம் பார்தி ஏர்டெல், கோடக் மஹிந்திரா வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
Advertisement
மேற்கு வங்கத் தேர்தலில் சாதகமான முடிவுகள் வெளியானதும், சந்தை எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் 4வது காலாண்டு நிதி முடிவுகள் அமைந்ததும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக வலுப்படுத்தியது. இது மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் தன்மையை புறந்தள்ளி, பங்குச் சந்தையை முன்னேற உதவியது. அதே வேளையில், ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றில் பாஜக வெற்றி பெறுவது, அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி, சந்தை உணர்வை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், 'ஹோர்முஸ் நீரிணை' மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சி குறித்த நிச்சயமற்ற சூழலால், பங்குச் சந்தையில் அவ்வப்போது லாபப் பதிவை முதலீட்டாளர்கள் மேற்கொண்டனர். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒன்றுக்கு 110 டாலர்களுக்குக் கீழே நீடிப்பது பங்குச் சந்தைக்கு ஒருவித நிம்மதியை அளித்தது.
மும்பை பங்குச் சந்தையில், ஸ்மால் கேப் குறியீடு 0.79 சதவீதமும், மிட்கேப் குறியீடு 0.75 சதவீதமும் உயர்ந்தன.
துறைசார் குறியீடுகளில், பிஎஸ்இ ரியல்டி, மூலதனப் பொருட்கள், தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் 1 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தைப் பதிவு செய்தன. அதே வேளையில், பிஎஸ்இ-யில் ஐடி மற்றும் பொதுத்துறை வங்கி ஆகிய துறைகள் அதிகபட்ச சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில், மொத்தம் 2,607 பங்குகள் உயர்ந்தும், 1,735 பங்குகள் சரிந்தும், 216 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடும், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடன் முடிவடைந்தன. விடுமுறையை முன்னிட்டு ஜப்பான் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பாவில் சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தை (வெள்ளிக்கிழமை) பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று ரூ. 8,047.86 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,487.10 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.48 சதவீதம் உயர்ந்து 109.8 அமெரிக்க டாலராக உள்ளது.