அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தால் 2% ஏற்றம் கண்ட இந்தியப் பங்குச் சந்தை!!
சென்செக்ஸ் 1,695.40 புள்ளிகள் உயர்ந்து 75,527.95 புள்ளிகளாகவும், நிஃப்டி 461.30 புள்ளிகள் உயர்ந்து 23,622.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்ததைத் தொடர்ந்தும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்டவையால், உலகளாவிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்திற்கு இணையாக, இன்றைய வர்த்தகத்தில், இந்தியப் பங்குச் சந்தை கணிசமான உயர்வுடன் நிறைவடைந்தன.
சென்செக்ஸ் 2.30 சதவீதம் உயர்ந்து 1,695.40 புள்ளிகள் உயர்ந்தது நிலையில், நிஃப்டி கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,775.47 புள்ளிகள் உயர்ந்து 75,608.02 புள்ளிகளை எட்டியது. அதே வேளையில், நிஃப்டி குறியீடு 483.75 புள்ளிகள் உயர்ந்து 23,645.35 புள்ளிகளைத் தொட்டது.
Advertisement
Advertisement
வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,695.40 புள்ளிகள் உயர்ந்து 75,527.95 புள்ளிகளாக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 461.30 புள்ளிகள் உயர்ந்து 23,622.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
ஈரானின் எண்ணெய் துறையைக் கைப்பற்றுவதாக மிரட்டிய சில மணிநேரங்களிலேயே, அந்த நாட்டின் மீதான ராணுவத் தாக்குதல்களை ரத்து செய்த அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாகவும், இந்த வார இறுதியில் ஐரோப்பாவில் கையெழுத்தாகலாம் என்றார்.
சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ, இன்டர்குளோப் ஏவியேஷன், டைட்டன், எடர்னல் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்டவை உயர்ந்தும் மறுபுறம் டெக் மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 4.63 சதவீதமும், ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு 2.81 சதவீதமும் உயர்ந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் உள்ளிட்டவை உயர்வுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் (வியாழக்கிழமையன்று) கணிசமாக உயர்வுடன் நிறைவுபெற்றது.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 1,987.09 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு இந்தியாவிற்கு சாதகமான நிலையில் உள்ள நிலையில், உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 3.98 சதவீதம் சரிந்து 86.78 டாலராக உள்ளது.