கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!
சென்செக்ஸ் 790.54 புள்ளிகள் உயர்ந்து 76,991.22 புள்ளிகளாகவும், நிஃப்டி 197.55 புள்ளிகள் உயர்ந்து 24,021.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் வங்கி, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைப் பங்குகளில் தென்பட்ட தீவிர கொள்முதல் ஆகியவற்றின் உந்துதலால், இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1.04 சதவீதமும், நிஃப்டி 0.83 சதவீதமும் மீட்சியடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 989.69 புள்ளிகள் அதிகரித்து 77,190.37 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 790.54 புள்ளிகள் உயர்ந்து 76,991.22 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 197.55 புள்ளிகள் உயர்ந்து 24,021.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன், ட்ரெண்ட், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் என்டிபிசி, டாடா ஸ்டீல், மாருதி மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தன.
Advertisement
Advertisement
நிஃப்டி-யில் மிட்கேப் 0.10 சதவீதம் உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடும் 0.4 சதவீதம் உயர்ந்தன.
ஆட்டோ, எனர்ஜி, மெட்டல், பவர் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்துத் குறியீடுகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரியல்டி பங்குகள் தலா 2% உயர்ந்தன. அதே நேரத்தில் தனியார் வங்கி குறியீடும் 1.8% உயர்ந்தன.
பரஸ்பர மற்றும் இருதரப்புக்குமான சாதகமான விதிமுறைகளின் அடிப்படையில், இந்தியச் சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிடும் வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அமெரிக்காவும் இந்தியாவும் மிக நெருக்கமாக உள்ளன என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வங்கித் துறைப் பங்குகளின் வலுவான ஏற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் மீட்சி ஆகியவற்றால், இந்தியப் பங்குச் சந்தைகள் வலுவாக மீண்டன. மத்திய கிழக்கில் அரசியல் பதற்றங்கள் தணிந்ததும், கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக அமைந்தது.
ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, முந்தைய வர்த்தக அமர்வில் கடும் சரிவைச் சந்தித்த தென் கொரியாவின் 'கோஸ்பி' குறியீடு 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடனும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கில் நிறைவடைந்தன. அமெரிக்கச் சந்தை செவ்வாய்க்கிழமையன்று கடும் சரிவுடன் நிறைவடைந்தன. நாஸ்டாக் காம்போசிட் 2.21 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 1.44 சதவீதமும் சரிந்தன.
தரவுகளின் அடிப்படையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 17.86 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
கே.பி.ஆர் மில், ஏதர் இண்டஸ்ட்ரீஸ், கேப்ளின் பாயிண்ட் லேபரட்டரீஸ், வெல்ஸ்பன் லிவிங், எஃப்.எஸ்.என் இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ், அபார் இண்டஸ்ட்ரீஸ், அரவிந்தோ பார்மா, சைடஸ் லைஃப் சயின்சஸ், குஜராத் ஃப்ளூரோகெமிக்கல்ஸ் மற்றும் லாரஸ் லேப்ஸ் உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.69 சதவீதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 75.78 அமெரிக்க டாலராக உள்ளது.
Benchmark equity indices Sensex and Nifty rebounded nearly 1 per cent on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.