தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!
சென்செக்ஸ் 521.16 புள்ளிகள் உயர்ந்து 78,285.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 159.50 புள்ளிகள் உயர்ந்து 24,430.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: முன்னணி வங்கிப் பங்குகளின் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களிடம் வெகுவாக பற்றி கொண்டதும் மற்றும் கச்சா எண்ணெய் விலை தொடர் சரிவு உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 4வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
உள்நாட்டுப் பங்குச் சந்தை உயர்ந்த நிலையில், அந்நிய முதலீடும் பங்குச் சந்தை உயர்வுக்கு வலுசேர்த்தது.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 634.15 புள்ளிகள் உயர்ந்து 78,398.06 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 521.16 புள்ளிகள் உயர்ந்து 78,285.07 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 159.50 புள்ளிகள் உயர்ந்து 24,430.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
கடந்த 4 வர்த்தக நாட்களில், சென்செக்ஸ் 1,806.4 புள்ளிகள் உயர்ந்த நிலையில், நிஃப்டி 564.6 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி வங்கி 3.59 சதவீதம் உயர்ந்தம், மேலும் மஹிந்திரா & மஹிந்திரா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் கோட்டக் மஹிந்திரா வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் பவர் கிரிட் ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.4% உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.7% உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
பல்வேறு துறையின் செயல்பாடுகள் நேர்மறையாக இருந்த நிலையில், ரியல் எஸ்டேட் துறை 1.8 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய துறையாக அமைந்தது. இதனை தொடர்ந்து நுகர்வோர் பொருட்கள் 1.5 சதவீதமும், வாகனத் துறை 1.3 சதவீதம், எண்ணெய் & எரிவாயு 1.1 சதவீதமும், உலோகத் துறை குறியீடு 1 சதவீதமும் மற்றும் எரிசக்தித் துறை 0.7% ஏற்றம் கண்டது. மறுபுறம் ஊடகத் துறை 0.95 சதவீதமும், பொதுத்துறை வங்கிகள் 0.9சதவீதம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை 0.6சதவீதமும் சரிந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 1,355.33 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பங்குச் சந்தை கலவையாக இருந்தபோதிலும், நிலையான கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவையால், இந்தியப் பங்குச் சந்தை நேர்மறையான போக்கைக் கடைபிடித்தது. உலகளவில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று லாபத்தை பதிவு செய்ததால் உலக சந்தையைப் பாதித்தது. அதே சமயம், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் முதலீட்டுப் போக்கு மேம்பட்டதால், அதிக மதிப்புள்ள பெரிய நிறுவனத்தின் பங்குகள் சிறப்பாக செல்லக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.
செம்இண்டியா ப்ராஜெக்ட்ஸ், எச்எஃப்சிஎல், ராடிகோ கேதான், ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ், அதானி எனர்ஜி, மணப்புரம் ஃபைனான்ஸ், ஆனந்த் ரதி, சோலா இன்வெஸ்ட்மென்ட், இண்டஸ்இண்ட் வங்கி, வர்தமான் டெக்ஸ்டைல்ஸ், ஓபராய் ரியாலிட்டி, ஹொனாசா கன்ஸ்யூமர், ஏபி கேபிடல், ஃபீனிக்ஸ் மில்ஸ், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட 200 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.
ஆசிய சந்தையில், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு உயர்வுடன் நிலைபெற்றது. மறுபுறம் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிவுடன் நிறைவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமானது.
நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 0.82 சதவீதம் குறைந்து, பீப்பாய் ஒன்றுக்கு 71.53 அமெரிக்க டாலராக உள்ளது.
Sensex and Nifty ended higher, taking their winning run to the fourth day on Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.