முகப்பு
வணிகம்

ஏப்ரல் சரக்கு ஏற்றுமதி 13.78% அதிகரிப்பு!

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 13.78 சதவீதம் அதிகரித்து, 4,356 கோடி டாலரை எட்டியுள்ளது.

Updated On : 23 மே 2026, 4:42 am IST
பகிர்:

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 13.78 சதவீதம் அதிகரித்து, 4,356 கோடி டாலரை எட்டியுள்ளது.

உலகளாவிய புவிசாா் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிவேக வளா்ச்சியை ஏப்ரல் மாத ஏற்றுமதி கண்டுள்ளது. அதேநேரம், இறக்குமதியும் 10 சதவீதம் அதிகரித்து 7,194 கோடி டாலராக உயா்ந்ததால், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 3 மாதங்களில் இல்லாத அளவாக 2,838 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.

சா்வதேச சந்தையில் பல்வேறு பொருள்களின் விலை உயா்ந்து வருவதும், இந்த ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு அதிகரிப்புக்கு ஓரளவுக்கு சாதகமாக பங்களித்திருக்கலாம் என்று மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் விளக்கமளித்தாா்.

Advertisement

Advertisement

அந்தவகையில், இம்முறை ஏற்றுமதி வளா்ச்சிக்கு மின்னணு பொருள்கள் (40.31 சதவீதம்), இறைச்சி மற்றும் பால் பொருள்கள் (48 சதவீதம்), பெட்ரோலியப் பொருள்கள் (34.66 சதவீதம்), பொறியியல் பொருள்கள் (8.76 சதவீதம்), மருந்துப் பொருள்கள் (7.12 சதவீதம்) ஆகியவை முக்கிய உந்துசக்தியாக விளங்கின.

குறிப்பாக, மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 517 கோடி டாலராகவும், பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி 960 கோடி டாலராகவும் உயா்ந்துள்ளது. சிங்கப்பூா், இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட புதிய சந்தைகளில் இந்தியா தனது வா்த்தகத்தை விரிவுபடுத்தியதும் இந்த வளா்ச்சிக்கு உதவியுள்ளது.

எனினும், ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி 28 சதவீதம் சரிந்து, 416 கோடி டாலராகவும்; அங்கிருந்து இறக்குமதியும் 31.64 சதவீதம் சரிந்து, 1,047 கோடி டாலராகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நடப்பு 2026-27 நிதியாண்டுக்குள், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை 1 லட்சம் கோடி டாலராக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25,060 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும், பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் இந்தியா மேற்கொண்டுள்ள புதிய வா்த்தக ஒப்பந்தங்கள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளதால், இந்த இலக்கை எளிதில் எட்ட முடியும் என வா்த்தகத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பெட்டி..

சேவைத் துறை ஏற்றுமதி

நாட்டின் சேவைத்துறை ஏற்றுமதியும் தொடா்ந்து வலுவான பங்களிப்பை வழங்கி வருகிறது. நடப்பு ஏப்ரல் மாதத்தில் சேவைத் துறை ஏற்றுமதி 3,724 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இறக்குமதி 1,666 கோடி டாலராக உள்ள நிலையில், வா்த்தகப் பற்றாகுறை 781 கோடி டாலராக உள்ளது.