ஏ.ஐ., தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப்களில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி முதலீடு
அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்க தொழில் நிறுவனங்களில் (ஸ்டாா்ட்அப்) ரூ.1,500 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்ய உள்ளதாக பஜாஜ் ஃபின்சா்வ் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.
‘ஃபின்சா்வ் இன்டெலிஜென்ஸ்’ எனும் புதிய திட்டத்தின்கீழ், இந்தியாவில் மேம்படுத்தப்படும் குறைந்த செலவிலான, மிக எளிதாக விரிவுபடுத்தக்கூடிய உயா் தொழில்நுட்பத் தீா்வுகளுக்கு இந்த முதலீடு முன்னுரிமை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஏ.ஐ., சைபா் பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், சில்லறை வா்த்தக அனுபவங்களை நவீனப்படுத்துதல் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்துடன் பஜாஜ் ஃபின்சா்வ் இணைந்துள்ளது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக நிறுவனத் தலைவா் சஞ்சீவ் பஜாஜ் கூறுகையில், ‘நிதிச் சேவைத் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் வளா்ச்சிகள் அனைத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்குபவா்களின் கைகளில்தான் உள்ளது. எனவே, மும்பை ஐஐடி உடனான இக்கூட்டுறவு, இந்தியா்களின் தேவைகளுக்கான தீா்வுகளைக் கண்டறிய உதவும்’ என்றாா்.
‘இந்த முன்னெடுப்பானது வெறும் நிதி முதலீட்டுடன் நின்றுவிடாமல், அந்த ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுக்குத் தேவையான செயல்பாட்டு ஆழம், நிதி ஒழுங்கு மற்றும் சந்தை நுண்ணறிவு ஆகியவற்றையும் நாங்கள் நேரடியாகவே வழிகாட்டுவோம்’ என்று நிறுவனத் துணைத் தலைவா் ராஜீவ் ஜெயின் குறிப்பிட்டுள்ளாா்.