ஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்!
வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டாலே ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்! குளிர் காலத்தில் இலைகள் அனைத்தையும் இழந்த மரங்கள்,
வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டாலே ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்! குளிர் காலத்தில் இலைகள் அனைத்தையும் இழந்த மரங்கள், இந்த சமயம் பூக்களைத் துளிர் விட ஆரம்பித்து விடும். இலைகள் அதற்கு அடுத்து தான்! அதனால் தான் செர்ரி மரங்களை தெருவெங்கிலும் நட்டு வைத்திருக்கிறார்கள்.
ஜப்பானில் Cherry blossom திருவிழா எவ்வளவு பிரபலமோ அதே மாதிரி ஜெர்மனியின் Bonn நகரம் ஏப்ரல் மாதத்தில் டூரிஸ்ட் வருகையால் நிரம்பி வழியும். அதிலும் குறிப்பாக Heerstr பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். பூக்களின் எண்ணிக்கை அதிகமா! இல்லை இங்கு நடமாடும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகமா என்றால் பதில் சொல்வது சற்று கடினம் தான்.
பத்து நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை இந்த செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கும். ஏப்ரலில் ஆரம்பித்து சில சமயம் மே மாதம் வரையிலும் கூட சில இடங்களில் காலநிலைக்கேற்ப மலர்கிறது. அதன் பிறகு தான் ஒன்றிரண்டாக இலைகள் துளிர் விட ஆரம்பிக்கிறது.
Advertisement
வசந்த காலம் ஆரம்பித்துவிட்டதை இம்மலர்கள் பறைசாற்றியதை அடுத்து, மக்களும் ஜெர்கின் மற்றும் கம்பளி ஆடைகளுக்கு விடை கொடுத்து சற்று ரிலாக்ஸ் ஆகின்றார்கள். காலநிலையும் அதிகாலையில் ஒற்றைப்படையில் இருந்தாலும் நேரம் செல்ல செல்ல இரட்டை இலக்கத்துக்கு மாறுவது மக்களுக்கு இன்னும் சந்தோசத்தை அதிகப்படுத்துகிறது!.
தொடந்து 3 மாத காலம் குளிர் மற்றும் பனியின் காரணமாக மரங்கள் அனைத்தும் இலைகள் முழுவதையும் உதிர்த்து வெறும் கம்பாக காட்சியளிக்கும். வசந்தகாலத் தொடக்கத்தில் பூக்கள் துளிர் விட்டு, பார்க்கும் மக்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறது. அது மட்டுமா! பலவித வண்ண மலர்களை பார்த்து தேனீக்களும் பறவைகளும் அதை நாடி வர, மக்கள் அதன் பின்னணியில் selfie எடுத்துக் கொள்வது என்று வசந்தகாலம் களை காட்டுகிறது.
Tulip போன்ற பிற மலர்கள் இந்த சமயத்தில் பூக்க ஆரம்பித்தாலும் செர்ரி பூக்களுக்கு இருக்கும் மவுசு சற்று அதிகம் தான்! நான் 1997ல் முதல் முறை ஜெர்மனி வந்தபோது, பிராங்பேர்ட் Leipziger தெருவில் நிறைய செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்குவதை பார்த்திருக்கிறேன். இந்த வருடமும் அதே மாதிரி நிறைய மரங்கள்! நிறைய மலர்கள்!! ஆம்! மரங்களை பாதுகாக்கவும் தெரிந்தவர்கள் ஜெர்மானியர்கள்!