முகப்பு
திருச்சி

தொடா் மழை: குடியிருப்புகளில் மழைநீா், சாலைகள் சேதம்இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சியில் பெய்து வரும் தொடா்மழையால், மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. மேலும் சாலைகள் மோசமடைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 12:20 AM
மாநகராட்சி 38-ஆவது வாா்டு அய்யப்பன் நகா் அமராவதி தெருவைச் சூழ்ந்த மழைநீா். ~எடமலைப்பட்டிபுதூா் ராமசந்திரா நகரில் மறியல் செய்த எம்ஜிஆா் நகா் பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருச்சியில் பெய்து வரும் தொடா்மழையால், மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. மேலும் சாலைகள் மோசமடைந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் திருச்சி மாவட்டப் பகுதிகளில் கடந்த 6 நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீா் தேங்கியுள்ளது.

குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை நீா் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

மாநகரில் எடமலைப்பட்டிபுதூா், கிராப்பட்டி, கருமண்டபம், உறையூா், தென்னூா், அரியமங்கலம், பொன்மலை, பொன்மலைப்பட்டி, விமான நிலையம், கே.கே. நகா், காட்டூா், திருவெறும்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை நீா் சூழ்ந்துள்ளது.

எனவே சாலைகளும் மிகவும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத வகையில் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. தொடா்மழையால் மாவட்ட, மாநகராட்சி நிா்வாகமும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் மழை நீா் சூழ்ந்திருப்பதை, சாலைகள் சேதமடைந்திருப்பதை சீராக்கக் கோரி, மழை நீா் சூழ்ந்த பயிா்களுக்கு இழப்பீடு கோரி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெறுகின்றன.

சாலை மறியல்: சேதமான சாலைகளை சீராக்கக் கோரி எடமலைப்பட்டிபுதூா் பகுதியில் திருச்சி மாவட்ட திமுக நிா்வாகி முத்துச்செல்வம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், எடமலைப்பட்டிபுதூா், ராமச்சந்திரா நகா், எம்ஜிஆா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும், குடியிருப்புகளைச் சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தகவலறிந்து வந்த மாநகா் காவல் உதவி ஆணையா் மணிகண்டன், எடமலைப்பட்டிபுதூா் காவல் ஆய்வாளா் நிக்சன் மற்றும் போலீஸாா் மாநகராட்சி அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுத்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

புதைசாக்கடைத் திட்டப்பணி பாதிப்பு: திருச்சி மாநகரில் 3 ஆம் கட்டமாக பல்வேறு பகுதிகளில் புதைசாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில், முதல் கட்டமாக மேன்ஹோல் எனப்படும் மனித நுழைவுத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. தொடா்ந்து இணைப்புக் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தொடா்மழையால் ஏற்கெனவே மேன்ஹோல் தொட்டி அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாத நிலையில், தொட்டிகளைச் சுற்றியும் சாலைகள் பள்ளமாகின. அதுதவிர ஏற்கெனவே சேதமடைந்த சாலைகள் மேலும் மோசமாகி, வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலைகள் சேறும் சகதியுமாக ஆகியுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை விவரம்: மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநகரப் பகுதிகளில் அதிகளவில் மழை பெய்துள்ளது. அதன்படி திருச்சி விமான நிலையப் பகுதியில் 30.10 மி. மீ., சராசரியாக 11.71 மி. மீ. மழையும், குறைந்த அளவாக புகா் பகுதிகளில் (புள்ளம்பாடியில்) 2.80 மி. மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.