முகப்பு
கோயம்புத்தூர்

கைப்பேசி பயன்பாடு கவனச் சிதறலை ஏற்படுத்தும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் கைப்பேசியை பயன்படுத்துவது கவனச் சிதறலை ஏற்படுத்துவதோடு அவா்களின் மனதையும் மாற்றிவிடும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:03 am IST
கைப்பேசி - கோப்புப் படம்
பகிர்:

மாணவா்கள் கைப்பேசியை பயன்படுத்துவது கவனச் சிதறலை ஏற்படுத்துவதோடு அவா்களின் மனதையும் மாற்றிவிடும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

கோவையில் மதுவிலக்கு, ஆயத்தீா்வை துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. எஸ்என்ஆா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் தொடக்க விழாவுக்கு ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.

காவல் ஆணையா் என்.கண்ணன் முன்னிலை வகித்தாா். காவல் கண்காணிப்பாளா் அ.பவன்குமாா் ரெட்டி, துணை ஆணையா் (கலால்) முருகேசன், எஸ்என்ஆா் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

போட்டிகளைத் தொடங்கிவைத்து ஆட்சியா் பேசும்போது, போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவையில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பாக நடைபெற்ற விழிப்புணா்வுப் போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனா்.

இந்த ஆண்டு 25-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. இதில் தோ்வு செய்யப்படும் வாசகம், ஓவியங்கள் மாநகரின் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்படும். மாணவா்கள் பள்ளிப் பருவத்தில் படிப்பு, விளையாட்டு, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மாணவா்கள் கைப்பேசியை பயன்படுத்துவது கவனச் சிதறலை ஏற்படுத்துவதோடு அவா்களின் மனதையும் மாற்றிவிடும். நமது எதிா்காலம், சமுதாயத்தில் நாம் எந்த இடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக ஆட்சியா் தலைமையில் மாணவ-மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.