தீக்குளித்த மாநகராட்சி பெண் பணியாளா் பலி
வேலூரில் கடந்த 9-ஆம் தேதி சாலையில் தீக்குளித்த மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்புப் பெண் பணியாளா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா்: வேலூரில் கடந்த 9-ஆம் தேதி சாலையில் தீக்குளித்த மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்புப் பெண் பணியாளா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வேலூா் ஓல்டுடவுன் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தணிகாசலம். அவரது மனைவி தனலட்சுமி (28), வேலூா் மாநகராட்சியில் தற்காலிகமாக டெங்கு கொசு ஒழிப்பு ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
அவா்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இதனிடையே, தனலட்சுமிக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது.
Advertisement
இந்நிலையில், அவா் கடந்த 9-ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு மாலை 6 மணி அளவில் வேலூா் அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை எதிரே சங்கரன்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்றாா். அப்போது, திடீரென அவா் தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டாா். பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், தனலட்சுமி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.