முகப்பு
விழுப்புரம்

இரண்டாம் நாளாக பதற்றம்: 50 பஸ்கள் உடைப்பு; டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில், 2-ஆம் நாளாக புதன்கிழமை, பல இடங்களில் பஸ் உடைப்பு,

Updated On : 2 மே, 2013 at 12:21 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில், 2-ஆம் நாளாக புதன்கிழமை, பல இடங்களில் பஸ் உடைப்பு, டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைப்பு, மரங்கள் வெட்டிச்சாய்ப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த இரு நாள்களில் 50 பஸ்கள் உடைக்கப்பட்டுள்ளன. திண்டிவனம் நகரில் முழு கடையடைப்பு நடைபெற்றது.

மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே நடைபெற்ற கலவரம் தொடர்பாக, விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை இரவு முதல் விழுப்புரம் மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 2-வது நாளாக புதன்கிழமையும் பஸ்கள் உடைக்கப்பட்டன.

50 பஸ்கள் உடைப்பு: கடந்த 2 நாள்களில் மட்டும் செஞ்சி அருகே மேல்பாப்பம்பட்டி, ஆலாத்தூர், செல்லப்பிராட்டிபாளையம், திண்டிவனம் அருகே இடையாந்தாங்கல், ஓலக்கூர், மரக்காணம், விழுப்புரம் அருகே திருக்கனூர், கோலியனூர், ராகவன்பேட்டை, வளவனூர் உள்ளிட்ட பல ஊர்களில் 50 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று தனியார் பஸ்களாகும்.

Advertisement

விழுப்புரம் அடுத்த பண்ருட்டி சாலையில் வாணியம்பாளையம் கிராமத்தில் சாலை ஓரம் இருந்த இரண்டு கொட்டகைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் மதகடிப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை காலை 10 மணியளவிலும் கண்டமங்கலம் கிராமத்தில் பகல் 11.30 மணியளவிலும் சாலை மறியல் நடந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அரசு போக்குவரத்து கழக பஸ்கள் தினசரி ஆங்காங்கே கிராமங்களில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போதைய பதற்றமான சூழலில் பஸ்களை அருகே உள்ள டெப்போக்களில்தான் நிறுத்தி வைக்கவேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கரடிசித்தூரில் டாஸ்மாக் கடை ஒன்றுக்கு புதன்கிழமை அதிகாலை மர்மகும்பல் தீ வைத்தது. இதில் கடையின் உள்ளே இருந்த மது பாட்டில்கள், வெடித்து சிதறின. கணக்கு ஆவணங்கள் கருகின. கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சேதமதிப்பு ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 790 என கூறப்படுகிறது. கடையின் விற்பனையாளர் முருகன் புகாரில், கச்சிராயப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கிராமத்துக்கு அருகேயுள்ள நூலகத்திற்கு மர்மக்கும்பல் தீ வைத்துள்ளது. இதில் புத்தகங்கள் தீயில் கருகின.

வடக்கனந்தல் பெட்ரோல் பங்க் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கும் மர்மநபர்கள் தீ வைத்தனர். அதில் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் வெடித்து சேதமடைந்தன.

கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் குதிரைச்சந்தல் பஸ் நிறுத்தம் அருகே 2 புளிய மரங்களுக்கும், கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் உள்ள ரோடுமாமாந்தூர் பஸ் நிறுத்தம் அருகே ஒரு புளிய மரத்திற்கும் மர்மகும்பல் தீ வைத்தது.

செஞ்சி: செஞ்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை 11 பஸ்கள் உடைக்கப்பட்டன. அன்றிரவு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புதன்கிழமை காலை 7 மணி முதல் பஸ்கள் இயங்கின.

திண்டிவனம்: திண்டிவனத்தில், நகர பாமக சார்பில் புதன்கிழமை முழு கடையடைப்பு நடைபெற்றது. நேரு வீதி மற்றும் நகர் முழுவதும் அனைத்து கடைகளும் காலை முதல் திறக்கப்படவில்லை. மேலும் பாண்டிச்சேரி மார்க்கம் மற்றும் மரக்காணம் மார்க்கத்தில் எந்த தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களிலிருந்து போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படையினர் என சுமார் 1400 பேரும், உள்ளூர் போலீஸார் 1000 பேரும் என 2400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 பெரிய அளவிலான அசம்பாவிதம் எதுவும் புதன்கிழமை நடக்கவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.