மணலூர்பேட்டையில் புதிய மார்க்கெட் கமிட்டி அமைக்கப்படுமா?
மணலூர்பேட்டையில் புதிய மார்க்கெட் கமிட்டி அமைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மணலூர்பேட்டையில் புதிய மார்க்கெட் கமிட்டி அமைப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையில் பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமான இடத்தில் 1977-ம் ஆண்டு அப்போதைய உணவுத்துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் திறக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடைந்தனர்.
இந்நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இங்கு மழைக் காலங்களில் விவசாயிகளின் விளைபொருள்களை பாதுகாத்து வைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் சுமார் 20 கி.மீ. தொலைவில் அரகண்டநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
Advertisement
இதையடுத்து மணலூர்பேட்டையில் புதிதாக இடம் தேர்வு செய்து மார்க்கெட் கமிட்டியை, விரிவுப்படுத்தப்பட்ட நிலையில் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாய மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மணலூர்பேட்டை ஈஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் மார்க்கெட் கமிட்டி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பலன் அளிக்கவில்லை.
சித்தப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரியில் நீர்ப்பிடிப்பு இல்லாத மேடான பகுதியில் மார்க்கெட் கமிட்டி அமைக்கலாம் என அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி வைத்தும் பலனில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 5 மாதத்துக்கு முன் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வடகரையில் உள்ள சுமார் 4.50 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு இடத்தில் மார்க்கெட் கமிட்டி அமைப்பதற்கு பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கண்ணிருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தேவையான அளவுக்கு அரசு புறம்போக்கு இடம் இருந்தும், இவ்விடத்தில் புதிய மார்க்கெட் கமிட்டி அமைப்பதற்கான முயற்சி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இம்முறையாவது முயற்சி எடுத்து மார்க்கெட் கமிட்டி அமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு ஆவன செய்யுமா?