முகப்பு
விழுப்புரம்

காட்டு யானைகள் வெளியேறியதால் விவசாயிகள் நிம்மதி!

சங்கராபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மீண்டும் புதன்கிழமை இடம் பெயர்ந்து

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 10:58 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

சங்கராபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மீண்டும் புதன்கிழமை இடம் பெயர்ந்து சென்றன. இதனால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

 உணவு, குடிநீர் தேடி கடந்த 1-ஆம் தேதி சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்குள் ஒரு குட்டி யானை உள்பட 6 யானைகள் புகுந்தன. 

இந்த யானைகள் அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடம்பெயர்வதும், மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் புகுவதுமாக இருந்தன.

Advertisement

 இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் 16-ம் தேதி புகுந்த யானைகள், கடந்த 5 நாள்களாக தொடர்ந்து பல்வேறுப் பகுதிகளில் உள்ள விளை பயிர்களை துவம்சம் செய்தன.

 விளை நிலத்தில் புகுந்த யானைகளை விரட்ட வாணவெடி வெடித்ததால், பல ஏக்கர் கரும்புகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. செவ்வாய்க்கிழமை சுமார் 3 ஏக்கர் கரும்புகள் தீக்கிரையாகின.

 அன்றிரவு வடபொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையொட்டி கரும்புத் தோட்டத்தில் தஞ்சம் புகுந்த யானைகள், புதன்கிழமை காலை 5.30 மணியளவில் அங்கிருந்து வடபொன்பரப்பி, வடகீரனூர், மேல்சிறுவள்ளூர், மணலூர் வழியாக சென்று காலை 8 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூர் கிராமத்தை அடைந்தன. வழியில் பல ஏக்கர் விளை பயிர்களை துவம்சம் செய்தபடி காட்டுயானைகள் சென்றன.

 பின்னர் அங்கிருந்து வெளியேறி தானிப்பாடியைக் கடந்து, செங்கம் வனப் பகுதியை நோக்கி இந்த யானைகள் சென்றன.

 கள்ளக்குறிச்சி கோட்ட வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் போலீஸôர் யானைகளை வனப் பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

 கடந்த 20 நாள்களாக தொடர்ந்து பீதியில் இருந்த கிராமவாசிகள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் இந்த யானைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

 இதையடுத்து இந்த யானைகளை நிரந்தரமாக அதனுடைய வசிப்பிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும், வனப் பகுதியை விட்டு மீண்டும் வெளியில் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 இந்நிலையில் இந்த யானைகளால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.