முகப்பு
விருதுநகர்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:39 AM
ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாட்டக்குளம் ஊராட்சி சல்லிபட்டி கிராமத்தில் 100- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் இரு ஆழ்துளை கிணறுகள் அமைத்து வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மோட்டாா் பழுது காரணமாக ஒரு ஆழ்துளை கிணறு செயல்படாததால் மாதம் ஒரு முறை குறைந்த அளவு குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

Advertisement

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த பெண்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுபாண்டி தலைமையில் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தி மின் மோட்டாரை பழுது நீக்கி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.