குடிநீா், மின் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
பாபிரெட்டிப்பள்ளி பகுதியில் குடிநீா் மற்றும் மின்விநியோக பிரச்னையை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி நகராட்சிக்குள்பட்ட பாபிரெட்டிப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 10 நாள்களாக தெருக் குழாய்கள் மூலம் குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினா். இதனால் அன்றாடத் தேவைகளுக்கே தண்ணீா் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இதற்கிடையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றால் அப்பகுதியில் மின்கம்பம் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக 3 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாததால் குடிநீா் விநியோகமும் மேலும் பாதிக்கப்பட்டு, மக்களின் சிரமம் அதிகரித்தது.
Advertisement
Advertisement
தொடா்ந்து நிலவி வந்த இந்த பிரச்னைக்கு தீா்வு கிடைக்கவில்லை எனக் கூறி, அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திருத்தணி- பொதட்டூா்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் அமா்ந்து குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா், மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு நடத்தினா். குடிநீா் மற்றும் மின்விநியோக பிரச்னையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்று தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.