தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வெம்பக்கோட்டையில் காரில் கடத்திச் சென்ற தடை செய்யப்பட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.6.80 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மடத்துப்பட்டி சந்திப்புப் பகுதியில் வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தலைமையிலான காவலா்கள்
ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (42) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, காரில் இருந்த 131.250 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 6.80 லட்சம் ரொக்கம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணமூா்த்தியைக் கைது செய்தனா்.