ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட ரயில் நிலையம்! எங்கு தெரியுமா?
மூடப்பட வேண்டிய ஒரு ரயில் நிலையம் ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்டது பற்றி..
பலருக்கும் பயனுள்ள முறையில் அதே வேளையில் பயன்பாட்டுச் செலவைக் குறைக்கும் முடிவுகளை எடுக்கும்போது, ஜப்பான் ரயில்வே துறை, பொறுப்புணர்வோடு செயல்பட்டுள்ளது என்ற ஒரு வரலாறு அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதுதான், ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட ரயில் நிலையம் பற்றிய தகவல்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அதிசய வரலாறு தற்போது வரை பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது ஜப்பானில் அதிகமானோர் பயன்படுத்தாத ரயில் நிலையங்களைக் கணக்கெடுத்து, பயன்பாட்டுச் செலவைக் குறைக்கும் வகையில் அதனை மூடுவதற்கு முடிவெடுத்த போதுதான் ஒரு விஷயம் அவர்களது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
Advertisement
Advertisement
ஜப்பானில் ஒரு ரயில் நிலையத்தை, பள்ளி செல்வதற்காக ஒரே ஒரு மாணவி பயன்படுத்தி வந்ததும், அந்த ரயில் நிலையம் மூடப்பட்டால், அந்த மாணவியின் கல்வி நிச்சயம் பாதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஹொகாய்டோ தீவில் அமைந்திருந்த கையு-ஷிராடாகி ரயில் நிலையம் 2016ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டு வந்தது. அது மூடப்படாமல் இயக்கப்பட ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. அது, அந்த ரயில் நிலையத்திலிருந்து பள்ளி சென்று வந்த ஒரே ஒரு மாணவி பள்ளி செல்ல வேண்டும், படிப்பைத் தொடர வேண்டும் என்பது மட்டுமே.
வெகுவாக மக்கள் பயன்படுத்தாமல், ஒருகட்டத்தில் சரக்குப் போக்குவரத்தும் முடங்கிய நிலையிலும் கானா ஹராடா என்ற மாணவி ஒருவருக்காக அங்கு நாள்தோறும் ரயில் நின்று சென்று வந்தது, அவர் பள்ளிப் படிப்பை முடிக்கும்வரை.
இந்த ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் ரயிலைப் பிடிக்க அவர் காலையிலும் மாலையிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் வீட்டிலிருந்து நடந்தே வர வேண்டும். இங்கு இயக்கப்பட்ட நான்கு ரயில்களில் இரண்டு மட்டுமே அவரது பள்ளி நேரத்துக்கு பொருந்தி வந்ததால், அந்த ரயிலை அவர் விட்டுவிட்டால் பள்ளி செல்ல முடியாத நிலையும் இருந்தது.
இறுதியாக, அந்த ரயில் நிலையம், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் மூடப்பட்டுள்ளது. அன்றுதான், அவரதுபள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்துள்ளது. அப்போது இந்த தகவல் முக்கிய தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று பலரது இதயங்களைக் கொள்ளைகொண்டுள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்புச் சேவைகள் வெறும் லாபத்துக்காக அல்லாமல், மக்களின் சேவைக்காகவே இயக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்ததாக இன்றும் மக்கள் நெகிழ்ச்சியோடு இதனைப் பகிர்ந்து வருவதே, சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த தகவல் வைரலாகக் காரணம் என்று கூறப்படுகிறது.
About a train station that was supposed to be closed being built for just one student..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.