ஒன்ஸ் மோர்
இலக்கணம் படிக்க எளிய வழி இருக்கிறதா? "எளிய' என்றால், எல்லாமே எளிதுதான். கடினம் என்று எண்ணினால், வெகு எளிதும் கடினம்தான்.
இலக்கணம் படிக்க எளிய வழி இருக்கிறதா? "எளிய' என்றால், எல்லாமே எளிதுதான். கடினம் என்று எண்ணினால், வெகு எளிதும் கடினம்தான். சிலருக்கு, கணிதம் ஏன் கடினமாக இருக்கிறதோ, இலக்கணம் சிலருக்குக் கடினமாகவும் இருக்கவும் அதேதான் காரணம். இலக்கணம் படிக்கும் முன்பாக, அது ஒரு "கசப்பு' மருந்து என்கிற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இலக்கண விதிகளைக் குறிக்கிற சில "பிரத்யேக' சொற்கள் உண்டு. அளபெடை, எச்சம், செய்வினை, செயப்பாட்டு வினை... இப்படி நிறைய. இந்தச் சொற்களையே கூட, பலர் கேலியும் கிண்டலும் செய்வதைப் பார்க்கிறோம். அறியாமைதான்; வேறொன்றும் இல்லை.
ஒவ்வொரு பாடத்துக்கும் (சப்ஜெக்ட்) தனித்தனியே சில அருஞ்சொற் பொருட்கள் உண்டு. கணினி சார்ந்து எத்தனை சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்? அப்படித்தான். அளபெடை, எச்சம் போன்றவை, தமிழ் இலக்கணம் சார்ந்த சொற்கள். ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இத்தகைய சொற்கள் உண்டு. மறந்துவிட வேண்டாம்.
Advertisement
Advertisement
"நேர் வழியில் நூறு' என்ற நூலில் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
***
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல. அதில் தேர்ச்சி பெறுவது கூடப் பெரிய சாதனையல்ல. அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்காவிட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள் கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்!
என்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருது!
தூர்வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும் கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும் ஆட்சியராய் இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச் செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்!
மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும், மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ. முடித்தேன். எம்.ஏ.ஆங்கிலம் படித்தேன். சமஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். 200க்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். 300க்கும் மேற்பட்ட கூட்டங்களில் இளைஞர்களுக்காகப் பேசினேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது.
என் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறையின் கனவு. அது பலித்தது என் காலத்தில். துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே!
இறை நம்பிக்கை: அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்புணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!
ஜெயிப்பது எப்படி? சுயநலம் குறித்துச் சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே, ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம் மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!
இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது: தேடுதலை நிறுத்தி விடாதீர்கள். குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!
கெட்ட பழக்கங்களை விட்டது எப்படி? கெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வோர் உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டேன்.
ஒரே கனவு: அழகான தோட்டம், "அடர்ந்த தோப்புகள்' கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தன்மை. இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங்களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப்போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை... அமைதியான இனிமை... நெருடல் இல்லாத வாழ்வு... வலியில்லாத மரணம்... சாத்தியப்படுமா?
"முதல் தலைமுறை' என்ற நூலில் வெ.இறையன்பு.