முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: மரணத்தை வெல்லும் சக்தி   வஞ்சி மரம்

நான் தான் வஞ்சி மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர்  களாமஸ் ரொட்டாங் என்பதாகும். நான்  அரேகாசியே   குடும்பத்தைச் சேர்ந்தவன்.

Updated On : 3 ஆகஸ்ட், 2019 at 2:24 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:13 PM


என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் வஞ்சி மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர்  களாமஸ் ரொட்டாங் என்பதாகும். நான்  அரேகாசியே   குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்கள் உண்டு. நான் இதய வடிவ பசிய இலைகளையும், தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் கொண்டுள்ள ஏறு கொடி இனமாவேன்.  வஞ்சி என்பது கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. 

என் கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை உடையது.  எனது நண்பன் ஆலமரத்தைப் போலவே,  என் பிரதான கிளைகளிலிருந்து மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்கும்.  என் அனைத்துப் பாகங்களும் கசக்கும். வேதத்தில், "தன்வந்திரி மகரிஷியின் இரண்டு கைகளாக சீந்தில் கொடி உள்ளது' என கூறப்பட்டுள்ளது. 

Advertisement

என் இலை, கொடி, வேர் மருத்துவக் குணங்களைக் கொண்டது.  பெயரைக் கேட்டாலே நடுநடுங்க வைக்கும் நோய்களான எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து என்னிடம் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு என் இலையை சாப்பிட கொடுப்பது அந்தக் கால வழக்கம்.  

சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதி, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, காச நோய் ஆகிய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடிய அருமருந்து என்னிடம் உள்ளது என விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. என் கிளைகள், நாற்காலிகள், குடைகள் முதலியன செய்யப் பயன்படுகின்றன. 

என்னை ஏன் சாகா மூலி என அழைக்கிறாங்கன்னு சொல்லட்டுமா குழந்தைகளே, ஸ்ரீராமனுக்கும், இராவணனுக்கும் கடும் போர் நடந்த போது, ஸ்ரீராமன் சுக்கீரீவன் தலைமையிலான வானரப்படைகளுக்கு குரங்குகளைப் பெருமளவில் பயன்படுத்தினார். அப்போது பெருமளவில் வானரங்கள் மாண்டன. அதைக் கண்டு ஸ்ரீராமன் மிகவும் வருந்தினார்.  தமது படையைச் சேர்ந்த வானரங்கள் பலியாவதை விரும்பாத ஸ்ரீராமன்,  தேவேந்திரனின் உதவியை நாடினார். அமுதகலசத்துடன் அங்கு வந்த தேவேந்திரன், அமுதத் துளிகளை பூமியில் தெளித்தான். மண்ணில் அமுதநீர் பட்ட இடமெல்லாம் நான் முளைத்து வளர்ந்தேன்.  என் காற்றுப்பட்டதும் மாண்ட வானரங்கள் எல்லாம் உயிர் பெற்று எழுந்து புதிய சக்தியுடன் உத்வேகமாகப் போரிட்டு, இராவணன் படையை ஓட ஓடவிரட்டின. இதைக் கண்டு ஸ்ரீராமன் மகிழ்ச்சியடைந்தார். மரணத்தை வெல்லக் கூடிய சக்தி என்னிடமிருக்கு. அதனால், என்னை சாகா மூலி என சித்தர்கள் அழைக்கிறார்கள். 

என் நட்சத்திரம் பூராடம். நான் கரூர் நகரம்,  திருக்கருவூர்ஆனிலை, அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவிலில்  தலவிருட்சமாக இருக்கிறேன். 

குழந்தைகளே, மரங்கள் இயற்கையின் கொடையாகி  விவசாய நிலங்களுக்கும், நகர்ப்புற நிலங்களுக்கும் எழிலையும், நிழலையும் தருகின்றன. நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.