முகப்பு
சிறுவர்மணி

மரங்களின் வரங்கள்!: பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு!  - விளா மரம்

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

Updated On : 1 ஜூன், 2019 at 1:05 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:33 PM

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான்  விளா மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் லிமோனியா அசிடிசீமா. நான் ரட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் தமிழ் மக்களின் வாழ்வியலோடு தொடர்பு உடையவன்.  சங்க இலக்கியங்களில் என்னைப் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கு. என்னை ஆங்கிலத்தில் வுட் ஆப்பிள் என்று சொல்வார்கள்.     குழந்தைகளே, விநாயகர் சதுர்த்தி என்றாலே உங்களுக்கு விளாம் பழம் ஞாபகத்திற்கு வருமே. ஏன்னா, உடலுக்கு ஊட்டம் தரும் பழமுன்னு விநாயகர் என்னைத் தான் சொல்றாரு. ஏன்னா,  விளாம்பழத்தைய கையிலெடுத்து ஆட்டிப் பார்த்தால் உள்ளே ஓட்டை விட்டுப் பிரிந்து பழத்தின் குலுக்கல் தெரியும்.  தனித்திரு விழித்திரு என்ற தத்துவத்தை தான் விநாயகப் பெருமான் இந்தப் பழம் மூலமா உணர்த்தராரு.  

விளாம் பழத்தில், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து,  புரதச் சத்து, விட்டமின் ஏ, சி  ஆகிய சத்துகள் இருக்கு. உங்களுக்கு உடம்பில் சுருக்கங்கள் ஏற்பட்டால் விளாம் பழத்தை சாப்பிடுங்க. சுருக்கம் ஓடியே போயிடும்.  முகம் பொலிவாக வேண்டுமா,  இரண்டு ஸ்பூன் பசும்பாலில் இரண்டு ஸ்பூன் கஸ்தூரிமஞ்சள், இரண்டு ஸ்பூன் விளாம்பழத்தினை அரைத்து முகத்தில் தடவி, காய்ந்தப் பின்னர் குளிர் நீரில் கழுவி, உங்கள் முகம்  பளப்பளன்னு பிரகாசிப்பதைப் பார்த்து நீங்களே மகிழ்ந்து ஆச்சரியப்படுவீர்கள்.  உங்கள் கூந்தல் பட்டுப் போல மிருதுவாக இருக்க வேண்டுமான, சீயக்காயுடன் விளாம்பழ ஓட்டினையும் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் கேசம் மிருதுவாக இருக்கும். இது அல்சர், வாய்ப் புண்,  நரம்பு தளர்ச்சி, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்து. எலும்புக்கு வலுவினைத் தருவதுடன் இரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை எதிர்க்கும் சக்தியும் என் பழத்திற்கு உண்டு.  

Advertisement

என் மரத்தின் வேர், பட்டை, காய், பழம், பிசின், இலை, கொழுந்து என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை நோயை நான் குணப்படுத்துவேன்.  என் பழம் கல்லீரலையும், மண்ணீரலையும் வலிமைப்படுத்தி, எலும்புகளுக்கு சக்தியைத் தரக்கூடியது.  அது உங்களுக்கு புத்துணர்ச்சிண்யும், சக்தியையும் அளிக்கும். தொண்டை புண்களை ஆற்றி, பல் ஈறுகளையும் உறுதியாக்கும்.   

என்  மரத்தின் பட்டை இருமல், இளைப்பு, நீர்வேட்கை, பிதற்றல், வெறிநோய், அழல்நோய், வாயு கோளாறு  போன்றவற்றிருக்கு சிறந்த மருந்தாகும். பட்டையை அரைத்து வெண் குஷ்ட நோய்ப் பகுதியில் தடவினால் குணமாகும். பிசினை பொடியாக்கி சாப்பிட்டால் நீரிரிவு குணமாகும். என் பழம் நறுமணத்துடன் துவர்ப்பும், புளிப்பும் உடையது.  இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சாப்பிட்டால் சுவை கூடும். பசியைத் தூண்டும்.  

என் தளிர் இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். வயிற்றுக் கடுப்பும் குணமாகும். செம்பருத்தி இலையுடன், சமபங்கு என் இலையையும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால்  தலைமுடி சும்மா பளபளன்னு பிசுகு இல்லாமல் இருக்கும்.   என் இலையை குடிநீரிலிட்டு அருந்தி வர காய்ச்சல், இருமல், தேக வறட்சி நீங்கும்.  

குழந்தைகளே, இந்தக் கோடைக்காலத்தில் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க நினைக்கிறேன். உங்களுக்கு வேர்க்குரு, கோடைக் கொப்புளங்கள் வந்தால் என் இலைக் கொழுந்தை சாறு பிழிந்து பூசி வந்தால் அவைகள் உடனே குணமாகும். இப்போதெல்லாம் எனது காய், பழங்களைப் பயன்படுத்தி பானங்களும் தயாரிக்கிறாங்க.  மரங்களை நடுவோம், வசந்த தென்றலை வாழ்வினில் சேர்ப்போம். காயோ, கனியோ, நிழலோ தந்து மரங்கள் உங்களைக் காக்கின்றன. எனவே, மரங்களை வெட்டாதீர்கள். 

நான்   நாகப்பட்டினம் மாவட்டம், திருநன்றியூர், அருள்மிகு உலகநாயகி சமேத மகாலட்சுமிபுரீஸ்வரர்,  திருவாரூர் மாவட்டம், திருக்காறாயில், அருள்மிகு கண்ணாயிரநாதர் ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். என் நட்சத்திரம் விசாகம்.  மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.