காசியில் நகரத்தாரின் புதிய விடுதி
உலகின் பழமையான ஆன்மிக நகரம் என்ற பெருமைக்குரிய காசி என்கிற வாரணாசியில் 72 ஆயிரம் கோயில்கள் உண்டு.
உலகின் பழமையான ஆன்மிக நகரம் என்ற பெருமைக்குரிய காசி என்கிற வாரணாசியில் 72 ஆயிரம் கோயில்கள் உண்டு. இங்கு காற்றிலும் மண் துகளிலும் 'ஓம் நமசிவாய' என்ற மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. இங்கு தமிழர்கள் தங்குவதற்காக நூற்றாண்டு கண்ட நகரத்தார் விடுதி ஒன்று இருந்தாலும், நவீன வசதிகளோடு கூடிய பத்து மாடியுடன் புதிய விடுதி அண்மையில் திறக்கப்பட்டது.
இதுகுறித்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதி நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவர் உலகம்பட்டி லேனா காசிநாதன், அவரது சகோதரரும், இன்னாள் தலைவருமான உலகம்பட்டி லேனா நாராயணன் கூறியது:
'ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், துறவிகள் காசிக்கு வந்து அருள் பெற்றனர். குமரகுருபரர் இங்கு மடத்தை நிறுவியதோடு, ஒரு கோயிலையும் கட்டியுள்ளார். பாரதியார் இங்கு சில ஆண்டுகள் வசித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து நகரத்தார் வியாபாரம் செய்ய மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்றனர். கொல்கத்தா வழியாகவே நகரத்தார் மியான்மர் சென்று வந்தனர். அப்போது அங்கிருந்து சுமார் 800 கி.மீ. தொலைவில் உள்ள காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபடுவர்.
காசி விசுவநாதர் கோயிலில் ஐந்து கால பூஜைகள் நடைபெற உரிய ஏற்பாடுகளைச் செய்து தர ஓர் அறக்கட்டளையை நகரத்தார் அமைத்தனர். அதன் மூலமாக மூன்று கால பூஜைகளுக்குரிய பால், தயிர், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், பூக்கள், பூமாலை, பழம், வஸ்திரம் என அனைத்தையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
'சம்போ மஹாதேவா' எனச் சொல்லிக்கொண்டே, பூஜை பொருள்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் இந்த வைபவம் 'சம்போ' என்றே குறிப்பிடப்படுகிறது. காசியின் தெருக்கள் வெள்ள பாதிப்புக்குள்பட்ட நெருக்கடியான நாள்களிலும் ஓடத்தில் பொருள்கள் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கோடோலியா பகுதியில் உள்ள நகரத்தார் சத்திரம் மிகப் பிரபலமானது. 'நாட் கோட் சத்ரம்' என்று குறிப்பிடப்படும் இந்தச் சத்திரம் 1813-இல் கட்டப்பட்டது. கங்கையில் பெரும் வெள்ளம் வந்தாலும், பாதிக்காதபடி தரைமட்டத்தில் இருந்து 16 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. குழுவாகத் தங்கும் டார்மெட்டிரி முறை முதல் குளிர்சாதன அறை வரை பலதரப்பட்ட வகையான தங்கும் வசதியும், மூன்று வேளையும் தமிழ்நாட்டு உணவு அளிக்கும் உணவுக் கூடமும் உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக லட்சம் பேர் இந்தச் சத்திரத்தில் தங்குகிறார்கள்.
கோயிலுக்கான பூக்கள், மலர் மாலைகளுக்கென்று சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் நந்தவனம் இருந்தது. காலப்போக்கில் நந்தவனத்தைப் பராமரிக்க முடியாமல் போய், வெளியிலிருந்து பூக்களையும், மாலைகளையும் வாங்கி, கோயிலுக்கு அனுப்பி வைக்கும்படியானது. நந்தவனப் பகுதியை அத்துமீறி சிலர் ஆக்கிரமித்தனர்.
2019-22 காலகட்டத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த பழ.ராமசாமி தலைமையிலான குழுவினர் பெரும் முயற்சி செய்தும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அணுகி, அவரது ஆதரவினாலும் நிலத்தை மீட்டெடுத்தனர். அங்கு இன்னும் ஒரு நவீனமான விடுதி கட்டுவதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
நகரத்தார் நன்கொடை மூலமாக அறுபது கோடி ரூபாய் மதிப்பில் 18 மாதங்களில் பத்து அடுக்கு மாடிக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31-இல் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் திறந்துவைத்தனர். இங்கு நவீன வசதிகள் கொண்ட 139 அறைகளும், கருத்தரங்க அறை, நவீன உணவுக்கூடம், சமையல் கூடம் உள்ளன' என்றனர்.