அலைகடலின் நடுவே...
நடிகர் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில், 'கண்ணான கண்ணே.. கண்ணான கண்ணே... என் மீது சாயவா?....'
நடிகர் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில், 'கண்ணான கண்ணே.. கண்ணான கண்ணே... என் மீது சாயவா?....' என்ற பாடலைக் கேட்கும்போது, தந்தை- மகள் உறவை, பாசப் பிணைப்பை கண்முன்னே கொண்டு வரும். வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களைப் பார்ப்போர் இந்தப் பாடல் வரிகளைக் கேட்காமல் கடக்க முடியாது. ஆண்டுகள் பல கடந்தாலும், இந்தப் பாடல் தமிழர்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துவிட்டது.
டி.இமான் இசையமைப்பில் உருவான இந்தப் பாடல் தேசிய அளவில் மீண்டும் வைரலானது. ஏன் தெரியுமா? இந்தப் பாடலைப் பாடிய மிதாலி தாக்கூர் பிகாரில் இளம் வயதில் பெண் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதால்தான்.
பாடலில் வந்த வரிகளில் ஒன்றான, 'அலைகடலின் நடுவே அலைந்திடவா தனியே....' என்பதைப் போன்று, பிகார் அரசியல் களத்தில் தனித்துவத்தோடு மிதாலி தாக்கூர் உருவாகிவிட்டார்.
Advertisement
Advertisement
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னர் இவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டு, அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார். 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிகாரின் இளம் எம்.எல்.ஏ. என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.இவர் இந்தியப் பாரம்பரிய இசை, கிராமிய இசையில் பயிற்சி பெற்ற இந்திய பின்னணிப் பாடகியாவார். 2000 ஜூலை 25-இல் பிகாரின் மதுபானி மாவட்டத்துக்கு உள்பட்ட பெனிபட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர் பண்டிட் ரமேஷ் தாக்கூர்- பாரதி தாக்கூர் தம்பதிக்கு மகளாக புதுதில்லியில் இவர் பிறந்தார்.
இரு சகோதரர்கள் ரிஷவ், அயாச்சி மற்றும் உறவினர்கள் வாயிலாக, மைதிலி, நாட்டுப்புற, ஹிந்துஸ்தானி இசை, ஆர்மோனியம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.இவரது ஆறாம் வயதில், திறமைகளை உணர்ந்த இவரது தந்தையும் தனது குடும்பத்துடன் புதுதில்லியில் உள்ள துவாரகாவிற்கு இடம் பெயர்ந்தார். இவரும், இவரது சகோதரர்களும் பால் பவன் சர்வதேசப் பள்ளியில் படித்தனர்.
2011-இல் பிரபலத் தொலைக்காட்சி ஒன்றில் பாடல் போட்டியில் இவர் தோன்றினார். தொடர்ந்து இவர் 2019 -இல் தேர்தல் ஆணையத்தால் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டார். இணையத்திலும், யூடியூப்பிலும் ஆன்மிகப் பாடல்களைப் பாடுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.