நிலாப் பாடல்களால் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் பாடும் நிலா 'பாலு'!
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாடல்கள் பற்றி...
இருளோடிய வானத்தில் பதிந்துக் கிடக்கும் நிலாவைப் பார்க்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சி துளிர்க்கும். வெறுந்தரையோ புல்வெளியோ எங்கிருந்து பார்த்தாலும் அதன் கொள்ளை அழகு மனதை குளிர்விக்கும். நிலாச் சோறு வாய்க்கப்பெறாத தலைமுறைக்கும்கூட அதன் உடனான பந்தம் இணக்கமாகவே இருப்பது ஆச்சரியம். நிலாவை ரசிக்க வானியல், விண்ணியல் எல்லாம் தெரிந்திருக்க தேவையில்லை.
சாமானியர் முதல் சர்வாதிகாரி வரை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி கண்டு ரசிக்கும் அதிசய அற்புதம் நிலா. மாலையில் தோன்றி காலையில் மறையும் அதன் மாச்சார்யங்களில் மனதைப் பறிகொடுக்காதவர்களே இல்லை. எத்தனையோ பேரின் நள்ளிரவுத் தனிமையைத் தூர்ந்துப் போகச் செய்வது, தேய்ந்து வளரும் தேன் நிலாதான் என்பதை மறுப்பதற்கன்று. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் அந்த நிலவுக்கும் நமக்குமான இடைவெளியைக் குறைத்தது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரல்தான்.
அதனால்தான் அவர் பாடும் நிலா பாலு. சினிமா பாடல் ஆசிரியர் பலருக்கும் வெகு சுலபமாக கிடைத்துவிடும் உவமை நிலாதான். தமிழ் சினிமாவில் பாகவதர் காலந்தொடங்கி சாய் அபயங்கர் காலம் வரை ஆயிரக்கணக்கான நிலாப் பாடல்கள் வந்துவிட்டன. அவைகளில் நிலாவுக்கே பிடித்த பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பி. என்றாலும் தவறில்லை. 1969-ல் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானபோது பாலு, முதலில் 'சாந்தி நிலையம்' படத்தில் 'இயற்கை என்னும் இளையக் கன்னி' பாடலையும் இரண்டாவதாக 'அடிமைப்பெண்' படத்தில் வரும் 'ஆயிரம் நிலவே வா' ஆகிய பாடல்களைப் பாடியிருந்தார்.
Advertisement
Advertisement
நிலவுக்குப் பிடித்தவர் என்பதாலோ என்னவோ, 'அடிமைப்பெண்' படம்தான் முதலில் வெளியானது. அதில் பாலு பாடிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் தமிழகத்தின் பட்டித் தொட்டியெங்கும் அவரைக் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து பல்வேறு பாடல்களைப் பாடி வந்த பாலு, 1977-ல் மேலும் இரு நிலாப் பாடல்களைப் பாடினார். வி.தக்ஷினாமூர்த்தி இசையில், 'நந்தா என் நிலா' படத்தில் வரும் 'நந்தா என் நிலா' என்ற பாடலையும், எம்.எஸ்.வி. இசையில் வந்த 'பட்டினப்பிரவேசம்' படத்தில் 'வான் நிலா நிலா' ஆகிய பாடல்களைப் பாடினார். இந்த இரண்டு பாடல்களுமே எஸ்பிபியின் கல்ட் கிளாசிக்.
அதிலும் 'வான் நிலா நிலா' பாடலை எஸ்பிபி பாடும் அழகே அழகு. பாடல் முழுக்க அவரது குரலோடு இழையோடி வரும் அந்த சோலோ வயலினும்கூட ஒருகட்டத்தில் எஸ்பிபி குரலில் மயங்கிப் போயிருக்கும். பாடல் வரிகள் அனைத்தும் 'லா' என்ற எழுத்தில் முடியும்படி எழுதப்பட்டிருக்கும். எஸ்பிபி ஒவ்வொரு 'லா'-வுக்கும் வேரியேஷன் காட்டி ஈர்த்திருப்பார்.
அதன்பிறகு, இளையராஜா காம்பினேசனில்தான் எஸ்பிபிக்கு எண்ணற்ற நிலாப் பாடல்கள் வெளிவந்தன. அதில் 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் எஸ்பிபி குரலில் வரும் 'இளைய நிலா' பாடல் சாகாவரம் பெற்றது. பட்டாம்பூச்சி ஒன்று நம் மேல் அமர்ந்து அதன் கொம்புகளால் ஸ்பரிசித்துவிட்டு பின், பறந்துச் செல்லும் உணர்வைத்தான் எஸ்பிபி இந்தப் பாடல் மூலம் நமக்கு கடத்தியிருப்பார். வான வீதியில், நீல வானிலே என வரும் இடங்களில் அவர் உச்சஸ்தாயி தொடும்போது இதயம் வரை நனைந்துப் போகவே செய்யும்.
அப்புறம் 'மௌன ராகம்' படத்தில் வரும் 'நிலாவே வா' பாடல். பாட்டோட ஓப்பனிங்ல ஆஆஆஆ என ஒரு ஹம்மிங் பாடுவார் அதைக் கேட்கும்போது சோகம் அப்பிக் கொண்ட ஒருவனது மன வலி வெளிப்பட்டிருக்கும்.
பின், 'நிலாவே வா' என பாடத் தொடங்கும் எஸ்பிபி, மனக் காயங்களை மயிலிறகால் வருடுவதைப்போல பல்லவியைப் பாடியிருப்பார். நிலாவின் வெளிச்சம் விழும் வீட்டுக்குள் மனம் வெதும்பி விசும்பும் ஒருவனை எஸ்பிபி குரலில் அடுத்தடுத்து வரும் சரணங்களின் வழியே தேற்றியிருப்பார்.
தொடர்ந்து ராஜாவின் இசையில், 'நிலவு தூங்கும் நேரம்', 'நிலவொன்று கண்டேன்', 'பாடு நிலாவே', 'வா வெண்ணிலா', 'ஒரே நாள் உனை நான்', 'வெள்ளி நிலவே' உள்பட பல்வேறு நிலாப் பாடல்களைப் பாடியிருப்பார். அதில் 'எஜமான்' படத்தில் வரும் 'நிலவே முகம் காட்டு' பாடல் மனதை கலங்கடித்துவிடும்.
குழந்தைகள் இல்லாத ஒரு தம்பதியின் உணர்வுப்பூர்வமான ஆழ்மனக் கவலைகளை எஸ்பிபி-ஜானகி குரல் அச்சுப்பிசகாமல் கொட்டித் தீர்த்திருக்கும். இந்த ஜோடிக் குரல்கள் எத்தனையோ வித்தியாசமான பாடல்களைப் பாடி மகிழ்வித்திருந்தாலும், இந்தப் பாடலில் நம்மை உருக வைத்திருக்கும்.
மேலும், கங்கை அமரனின் இசையில் 'நீலவான ஓடையில்', எஸ்பிபியின் இசையில் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே' என பாலு பாடிய அனைத்து நிலா பாடல்களுமே மனதை வருடுபவைதான். ஒவ்வொரு முறை நிலா பார்க்கும்போது மனம் எப்படி மகிழ்வுறுகிறதோ, அதுபோலத்தான் எஸ்பிபி பாடிய நிலாப் பாடல்களும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மனதை அமைதி கொள்ளச் செய்யும். நிலா பார்க்கும் போதெல்லாம் நம் நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலாப் பாடல்களின் வழியே எஸ்பிபியின் குரல் நீக்கமற நிறைந்திருக்கும்...
(ஜூன் 4 - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பிறந்த நாள்)