முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நொய்யலை மீட்டெடுக்கும் சிறுதுளி!

'நமது ஊர் சிங்கப்பூர் போல மாறவேண்டும் என்று பலர் சொல்கிறார்கள்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 4:00 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:07 PM

'நமது ஊர் சிங்கப்பூர் போல மாறவேண்டும் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், எதிர்காலத்தில் சிங்கப்பூர் கோயம்புத்தூரை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதே எனது கனவு. மக்கள் தொகையை பாரமாகப் பார்க்காமல் ஒரு நாட்டின் செல்வமாகப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனும் தனது வீட்டு வாசலில் ஒரு மரத்தை நட்டு, ஒரு சொட்டு நீரையும் சேமிக்கப் பழகிக்கொண்டால், இயற்கை அன்னை நம்மை என்றும் கைவிடமாட்டாள்'' என நம்பிக்கையுடன் கூறுகிறார், எழுபது வயதைக் கடந்த சமூக ஆர்வலர் வனிதா மோகன்.

இயந்திரங்களின் சத்தத்துக்கும், தொழிற்சாலைப் புகைகளுக்கும் இடையே தொலைந்துபோன கோவையின் இயற்கை அழகை, 'சிறுதுளி' என்ற அமைப்பின் மூலம் மீட்டெடுத்து வருகிறார் வனிதா மோகன். கோவையின் நிலத்தடி நீர் மற்றும் பசுமைப் போர்வையை மீட்டெடுப்பதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளார். இஸ்ரேல் போன்ற நாடுகள் குறைந்த தண்ணீரை வைத்துக் கொண்டு விவசாயத்தில் சாதிப்பதை, நம் ஊரிலும் ஏன் சாத்தியப்படுத்த முடியாது என்ற வினாவே இவரை இந்தத் துறைக்கு இட்டுச் சென்றுள்ளது.

Advertisement

நீர் மேலாண்மையில் புரட்சி

கடந்த 23 ஆண்டுகளில் சிறுதுளி செய்துள்ள சாதனைகள் அதிகம். சுமார் 499 ஏக்கர் நிலப்பரப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நட்டு வளர்த்துள்ளதோடு, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படவும் வழிவகை செய்துள்ளனர்.

பல தசாப்தங்களாகத் தூர்ந்து போயிருந்த தடுப்பணைகள், வரத்துக் கால்வாய்கள், குட்டைகள் மற்றும் குளங்கள் இவர்களின் முயற்சியால் இன்று புத்துயிர் பெற்றுள்ளன. தற்போது மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் பல்வேறு அணைக்கட்டுகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கத் தொடங்கியுள்ளது.

சவால்களை முறியடித்த சாதனை

2003-ஆம் ஆண்டு கிருஷ்ணாம்பதி குளத்தை மீட்டெடுத்தது சிறுதுளியின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சாத்தியமில்லை என்று பலரும் விமர்சித்தபோது, இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்கின் வழிகாட்டுதலுடன் களமிறங்கி வெற்றி கண்டனர்.

அதன் விளைவாக, இன்று ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகாலத்தில் கடற்படையினரின் பயிற்சிக் களமாக இருந்த வாலங்குளம் சாக்கடைக் கழிவுகளால் பாழடைந்தபோது, அதையும் மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அயராது உழைத்தது.

தேசிய அளவில் அங்கீகாரம்

சிறுதுளியின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அப்துல் கலாம் சேவா ரத்னா விருது, நன்னெறிச் செம்மல் விருது மற்றும் ஆளுநரின் சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவன விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளது. இது கோயம்புத்தூருக்கு மட்டுமல்லாமல், தமிழகம் முழுமைக்கும் ஒரு முன்னுதாரணமான செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வனிதா மோகன் மேலும் கூறுகையில், 'நொய்யல் ஆறு கொங்கு மண்டலத்தின் உயிர்நாடி மட்டுமல்ல; அது ஒரு வரலாற்றுப் பெட்டகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி காவிரி ஆற்றுடன் கலப்பது வரை, இந்த ஆறு பல நூற்றாண்டுகளாக தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக நொய்யல் ஆறு கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. ஆலைக்கழிவுகள் மற்றும் நகராட்சி கழிவுநீர் ஆற்றில் கலக்கத் தொடங்கியது. ஆற்றின் வழித்தடங்கள் மற்றும் குளங்கள் தூர்ந்து போனதால், ஆறு ஒரு கழிவுநீர்க் கால்வாயாக மாறியது.

விஞ்ஞானிகள் நொய்யலை இறந்துபோன நதி என்று அறிவிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த இக்கட்டான சூழலில், நொய்யலை மீட்டெடுக்க சிறுதுளி போன்ற தன்னார்வ அமைப்புகள் முன்னெடுத்த முயற்சிகள் மிகவும் முக்கியமானவை.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நொய்யல் யாத்திரை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு நதியைத் தூய்மைப்படுத்த உறுதி ஏற்றனர். சிறுதுளி அமைப்பு அரசுடன் இணைந்து பல்வேறு குளங்கள், அணைக்கட்டுகளைத் தூர்வாரியுள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.