சாதனை மாணவர்களை உருவாக்குகிறேன்
'நாசாவுக்கு இரு மாணவர்களை 2015-ஆம் ஆண்டில் அனுப்பினேன்.
பொ.ஜெயச்சந்திரன்
'நாசாவுக்கு இரு மாணவர்களை 2015-ஆம் ஆண்டில் அனுப்பினேன். 2018-இல் 1,551 மாணவர்களுடன் மிகப் பெரிய 'ஓம்' என்ற உருவத்தைக் கொண்டு கின்னஸ் சாதனையையும், 2019-இல் 1,060 மாணவர்கள் 23 யோகாசனங்களை 9 நிமிடங்களில் செய்து நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் சாதனையையும் படைக்க உறுதுணையாக இருந்தேன்.
200 சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலிருந்து 4ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற கிளஸ்டர் 6 கைப்பந்து போட்டியை நடத்தியுள்ளேன். இவ்வாறாக, மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றுவதே எனது லட்சியம்'' என்கிறார் சென்னை கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பாடசாலையின் முதல்வர் சந்திரிகா பிரசாத்.
தமிழ்நாடு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு-ஆய்வுக் குழு உறுப்பினர், வாரியத் தேர்வுக்கான நோடல் தலைவர், 36 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணியில் ஈடுபட்டு வரும் சந்திரிகா பிரசாத், மாணவர்கள் கல்வி கற்றலில் பல்வேறு புதுமைகளை மேற்கொண்டு வருகிறார். அவரிடம் பேசியபோது:
'தொடக்கத்தில் மழலையர் பிரிவில், செயல்முறைக் கல்வியை வகுப்பறையில் செயல்படுத்தினேன். அதனால் மகிழ்ச்சியான கற்றலை மாணவர்கள் பெறுகின்றனர். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் உணர்வுகளையும் அறிந்து, அவர்களின் உள்ளுணர்வுகளுக்கு ஏற்ற வகையிலும், குடும்பச் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு பாடங்களை நடத்துகிறேன். இதர ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துகிறேன்.
மனிதாபிமான மதிப்பை மாணவர்களின் மனதில் வளர்க்கும் வகையில், சர்வோதயா பெண்கள் விடுதி, ஸ்ரீசாரதா முதியோர் இல்லம் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்கிறேன்.
பயம் கொள்ளாமல் படிக்கும் வகையில், புதிய பயிற்சி, கலந்தாய்வு முறைகளைச் செயல்படுத்தி வருகிறேன். வினாத்தாள் வரையறை, மதிப்பீட்டு ஒருங்கிணைப்பு, தேர்வறை ஒழுங்கு என அனைத்திலும் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறேன்.
படிப்பதில் மட்டுமல்ல. மாணவர்கள் செயலில் திறமையைக் காட்டுங்கள். ஒவ்வொரு தோல்வியும், ஒரு பாடமாக மாறும். முயற்சி செய்வதை நிறுத்தாதீர்கள் போன்ற தன்னம்பிக்கை வார்த்தைகளை அளித்து, மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறேன்.
மாணவர்களின் ஆளுமை, திறன்களை மேம்படுத்தும் வகையில், கருத்துப் பரிமாற்ற வகுப்புகள், திறன்கள் அடிப்படையிலான பயிற்சிகள் உள்ளிட்ட நவீனத்துவங்களை அறிமுகம் செய்துள்ளேன். இதனால் மாணவர்கள் புத்திசாலித்தனமாகவும், சமூகத்தில் நன்கு பழகக் கூடியவர்களாகவும் மாறியிருக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு, ஒழுக்கம், மன தைரியத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். மாணவர்களிடம் திறந்த மனதுடன் பேசுதல், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை நுட்பமாகக் கவனித்தல், பெற்றோருடனான தொடர்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறேன்.
தேர்வுக் காலத்தை எதிர்கொள்வது எப்படி?:
மாணவர்களின் மன அழுத்தம், பதற்றத்தைக் குறைக்கத் தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே தேர்வு மையத்துக்கு அனுமதித்து சாந்தமாக வைத்துவிடுவேன். நேர்மையாக தேர்வு நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தி இருக்கிறேன்.
ஆசிரியர்களுக்கு...: கற்றல் சார்ந்து மாணவர்களின் மனநிலையை அறிதல், பொறுமையுடன் நடத்தல், ஒழுக்கம் போன்றவைகளே ஒரு சிறந்த ஆசிரியரின் பணியாகும். தேர்வுகளுக்காக மட்டுமல்லாமல், வாழ்க்கையை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கான கல்வி அமைய வேண்டும். அழகாகப் பேசுதல், குழுவாகப் பணியாற்றுதல், நேர்மையாக நடத்தல் போன்றவை மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற தேவைப்படும் திறன்களாகும். ஆசிரியர்கள் மாணவர்களின் தேவைக்கேற்ப கற்றுக் கொடுத்தல் வேண்டும்.
விருதுகள்: மாணவர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 'சிறந்த முதன்மை விருது', கலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 'கலா பூஷன் விருது', முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்கிய சிறந்த நிர்வாகத் திறன்-தலைமைத்துவ விருது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன்.'' என்கிறார் சந்திரிகா பிரசாத்.