உயர்கல்வியைத் தேர்வு செய்ய தேடலும், தெளிவும் அவசியம்!
உயர்கல்வியைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு தேடலும், தெளிவும் அவசியம் என்பது பற்றி..
உயர்கல்வியை நாம் சிறப்பாக படித்தால் நிச்சயம் வாழ்வில் உயர முடியும். பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கல்விக்குச் செல்லும்போது நமது விருப்பமும் தேர்வும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும்.
இந்திய அளவில் 15 லட்சம் பள்ளிகளில் 25 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிப் படிப்பை படித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்லும்போது பொறியியல், கலை அறிவியல், சட்டம், மருத்துவம், விவசாயம், இசை என எண்ணற்ற படிப்புகள் உள்ளன. இவற்றில் எதைப் படிப்பது என்கிற தேர்வுதான் அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
எந்த துறை சார்ந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பதை அறிந்துகொண்டு, எந்தக் கல்லூரில் படித்தால் சிறப்பான கல்வியைப் பெறலாம் என்பதையும் தெரிந்து, அதில் சேர்ந்து படித்தால் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் எதைத் தேர்வு செய்து படித்தாலும் அதை விரும்பித் தேர்வுசெய்து படிக்க வேண்டும். எவரொருவர் பத்தாயிரம் மணி நேரம் ஒரு விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்களோ அவர்களே அதில் சிறந்த ஆளுமையுடையவர்களாக மாறுகிறார்கள் என்று சொல்கிறார்கள். நம்மிடம் இருக்கும் ஏதோவொரு திறனை சரியாக கண்டறிந்து அதற்கேற்ற படிப்பில் சேர வேண்டும்.
Advertisement
Advertisement
இன்றைய மாணவர்கள் தங்கள் முன்பு குவிந்திருக்கும் வாய்ப்புகளை அறியாமல் இருக்கிறார்கள். மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் உதவிபெற்ற 150 கல்வி நிறுவனங்களில் மட்டுமே 72 வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் நம் மாணவர்களுக்குத் தெரிந்தவை நீட் மற்றும் ஜேஇஇ இரண்டு தேர்வுகள் மட்டுமே. 72 வகையான தேர்வுகள் என்றாலும் அதற்கு 4 வகைகளிலான தயாரிப்புகளே போதும். இந்த 4 வகை தயாரிப்புகளில் ஒரு வகை தயாரிப்பில் மிகுந்த தேர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம்.
முதல் வழி இயற்பியல், வேதியியல், கணிதம். இரண்டாவது வழி இயற்பியல், வேதியியல், உயிரியல். மூன்றாவது வழி வணிகவியல் பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களுக்கான ஆபிடியூட், லாஜிக்கல் ரீசனிங், வெர்பல் எபிலிட்டி அண்ட் ஜென்ரல் நாலெட்ஜ். நான்காவது மாணவர்களிடம் இருக்கும் இசைத்திறன், ஓவியம் வரையும் திறன் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண் இருந்தால் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்து இதற்கான படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம்.
எனவே, உயர்கல்வியை தேர்வு செய்யும்போது கவனத்துடன் மாணவர்கள் செயல்பட வேண்டும்.