ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்...
ஊருக்கு ஊர் தன்னார்வ இளைஞர் அமைப்புகள் சமூக நலன் சார்ந்த வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
வெ. கணேசன்
ஊருக்கு ஊர் தன்னார்வ இளைஞர் அமைப்புகள் சமூக நலன் சார்ந்த வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், எளியோரின் துயர் துடைக்கவும், திறமை, மதிப்பெண், முயற்சி, ஆர்வம் இருந்தும் படிப்புக்கான கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர் விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட அருப்புக்கோட்டையில் செயல்படும் "அகல் மாணவர் நலச்சங்கம்' என்ற பொதுநல அமைப்பினர்.
இங்குள்ள தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2006-07-ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பும், பின்னர் பல்வேறு இடங்களில் உயர்கல்வியும் முடித்தவர்கள் பலர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் ஐம்பது பேர் ஒரு குழுவாக இணைந்து, அடித்தட்டு மக்கள் மிகுதியாக வாழும் தமது ஊர் மாணவர்களின் படிப்புக்கு உதவுவது என முடிவெடுத்து உருவானதே இந்தச் சங்கம். "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் எம் கடனே...' என்பதை தாரக மந்திரமாகக் கொண்டுள்ளனர். அதற்கு, தங்களது பங்களிப்பாக குறிப்பிட்ட தொகையை அளித்து, நிதி திரட்டிக் கொண்டனர்.
Advertisement
ஆண்டுதோறும் இந்த நகரின் ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் இக்குழு நிர்வாகிகள் நேரில் சென்று, தலைமையாசிரியரிடம் ஏழை மாணவர் பட்டியலைக் கேட்டுப் பெறுவர். பின்னர் மாணவர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, பள்ளியில் வைத்து உதவித் தொகையை வழங்கி வருகின்றனர்.
இதுதவிர, இந்தப் பகுதியைச் சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் எவருக்கேனும் கல்லூரிக் கட்டண உதவி தேவைப்பட்டாலும், அவர்களுக்கும் உதவி செய்யப்படுகிறது. ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் நகரில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அகல் அமைப்பின் உதவிக்கரம் சென்று சேர்கிறது.
2015-ஆம் ஆண்டு சென்னை, கடலூர் பகுதிகளில் பெரு வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட வேளையில், கடலூருக்கு ஒரு குழுவாகச் சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்கித் தந்து, நேரடியாக மக்கள் துயர் துடைப்பதில் பங்கேற்றனர். கரோனா காலத்திலும் இது மாதிரியான உதவிகள் செய்யப்பட்டன. அடிப்படை நோக்கமான கல்வி உதவித் தொகை வழங்குவதுடன், பல்வேறு சமூக சேவைகளையும் அகல் மாணவ நலச் சங்கத்தினர் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.