தொடர் மின்வெட்டு, போராடும் மக்கள்! யார்தான் காரணம்? என்னதான் தீர்வு?
தமிழ்நாட்டில் தொடர் மின் வெட்டுப் பிரச்னைகளால் மக்கள் அவதியுறும் நிலையில், இதற்கு என்ன காரணம், தீர்வு பற்றியோர் அலசல்...
தமிழ்நாடு முழுக்க மின் வெட்டு பிரச்னை காரணமாக மக்கள் வீதிகளுக்கு வந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்ன?
சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு மின் ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலர் தி. ஜெய்சங்கர் என்ன சொல்கிறார்? தினமணி.காம் செய்தியாளர் க. சுவாமிநாதனுக்கு அளித்த நேர்காணலிலிருந்து:
தமிழகத்தின் மிக முக்கிய துறைகளில் மின்சாரத் துறை ஒன்று. அது சீராக இயங்கினால்தான் தொழிற்சாலைகள் முதல் அனைத்துத் துறைகளும் சரியாக இயங்கும்.
Advertisement
Advertisement
பொதுவாகவே, மின் துறையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும். மின் தேவைக்கும், கையிருப்பு மின்சாரத்துக்கும் சராசரியாக 4,900 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாடு உள்ளது. அரசும், அதனை வெளிச் சந்தையிலிருந்து வாங்கிக் கொடுக்கிறது.
ஆனால், மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்தடங்கள் அதாவது, மின் கம்பிகள், மின்மாற்றிகள் போன்றவை 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவையாக உள்ளன. இவற்றை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் தளவாடப் பிரச்னையைப் பற்றிப் பேச வேண்டும்.
அடுத்து மின்வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லை. மின் தடை ஏற்படுகிறது. ஆனால், அதைத் சரி செய்ய பணியாளர்கள் இல்லை. உண்மையில் மின் தடையே ஏற்படாமல் சீரான மின் விநியோகத்தைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.
மின் தடைக்குப் பணியாளர்கள்தான் பிரச்னை என்றால், கடந்த ஆண்டு இல்லாத பிரச்னை இந்த ஆண்டு வந்தது எப்படி?
சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை வைத்துதான் இந்த ஆண்டு மின் தடை என்று கூறுகிறீர்கள். ஆனால், கடந்த 2024, 2025 என எல்லா ஆண்டுகளுமே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கும். இந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகவேகூட ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சமூக வலைத்தளத்தில் போராட்ட விடியோ வெளியாவதால்தான் இதுபற்றி இந்த ஆண்டு அதிகம் பேசுகிறார்கள் என்கிறார்.
சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாவதால்தான் மின் தடை பற்றித் தெரிகிறது. அதற்கு முன்பு இப்படி இல்லையே. சமூக வலைத்தளங்கள் வந்த பிறகே இப்படி மின் வெட்டு குறித்து அதிகம் பேசுகிறார்கள்.
இந்தக் கூற்று மின் வெட்டுக்காகப் போராடும் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது போல இல்லையா?
மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், சமூக வலைத்தளங்களின் தூண்டுதலால்தான் நடக்கிறது. மின் தடை ஏற்பட்டால் மின் வாரியத்தின் தொடர்பு எண்ணைத் தொடர்புகொண்டுதானே சொல்ல வேண்டும். அனைத்து அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுகளில் எல்லாம் மக்கள் தொலைபேசியில்தான் கேட்பார்கள். இப்போது எந்தத் தொலைபேசி எண்ணும் கிடைப்பதில்லையா? அதனால்தான் சமூக வலைத்தளத்தால்தான் போராட்டம் நடக்கிறது என்று சொல்கிறேன்.
அது மட்டுமல்ல, சின்ன கோளாறுகூட டிரான்ஸ்பார்மர்களை பாதிக்கும். 100 இடங்களில் ஒரே நேரத்தில் மின் தடை ஏற்படும். அந்தப் பகுதியில் 3 ஊழியர்கள்தான் இருப்பார்கள். இவர்கள் 100 இடங்களுக்கும் சென்று சரி செய்ய வேண்டும் என்றால் எத்தனை மணி நேரம் ஆகும்? மின் தடையின் பின்னணியில் இருக்கும் டெக்னிக்கல் பிரச்னை மக்களுக்குத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை.
மின் தடையின் பின்னணியில் உள்ள பிரச்னையை மக்கள் ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?
சாமானிய மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மின் தடையை பெரிதுபடுத்தி அரசியல் செய்வோர் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தவர்கள்கூட, இப்போது மின் தடையை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த பிரச்னைகள் தெரிந்திருக்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் திறமைவாய்ந்த தொழில்நுட்ப திறன் பெற்ற பணியாளர்கள், அதிகாரிகள் ஓய்வுபெற்றிருக்கிறார்கள். இறந்தவர்கள் எண்ணிக்கை தனி. இவர்களால் காலியான பணியிடங்களில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன? ஒன்றுமில்லை. இதுவரை டிஎன்பிஎஸ்இ மூலம் வெறும் 50 பேர் மட்டுமே பணிக்கு எடுக்கப்பட்டனர்.
எனவே, உடனடியாக மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பித் தேவையான தளவாடப் பொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு மாறாக, மின் வாரியத்தில் யாருமே வேலை செய்வதில்லை என்று பிரச்னையை திசை திருப்பக் கூடாது.
அரசியலாக்குவது யார்?
மின் தடை மற்றும் மின்சாரத் துறை பிரச்னைகளை எப்போதுமே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது. காரணம், அதற்குள் இருக்கும் பிரச்னைகளை களையத்தான் நடவடிக்கை தேவை. அரசியல் தேவையில்லை.
சென்னை மண்டலத்தில் மட்டும் மின்சார வாரியத்தில் 80 சதவிகித பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலைமை மின் வாரியத்தின் வரலாற்றிலேயே இருந்ததில்லை, இப்படியிருந்தால் யாரை வைத்து வேலை செய்வது, ஒரே நேரத்தில் பல இடங்களில் மின் தடை நேரிட்டால், எந்த இடத்துக்கு முதலில் செல்வோம், இப்படியிருந்தால் மின் தடை இருக்கத்தான் செய்யும். இதற்கு தொழிலாளர்களைக் குறை சொன்னால் எப்படி, முந்தைய ஆண்டுகளில் பணியாளர்களை நிரப்பாததுதானே பிரச்னை.
பணியாளர்களை எடுக்கும் நடவடிக்கையைத் தொடங்கினால் உடனடியாகப் பணியில் சேர ஆள்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே, பணியாளர்களை உடனடியாக நிரப்புவதே முதல் பணியாக இருக்க வேண்டும்.
பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஒரு ஊழியர், நான்கு பணியாளர்களின் வேலையை செய்யும் நிலை உள்ளது.
மற்றொரு பக்கம் மின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, மின்சாரம் வரும் வழித்தடங்களின் திறனை அதிகரிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அதிகரிப்பதே இல்லை. திறனை அதிகரிக்காமல் விட்டுவிட்டால் என்னவாகும்? ஓவர்லோடு ஏற்படும்போது ட்ரிப் ஆகும். ஓவர்லோடு அதிகரிக்கும்போது டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். ஓவர்லோடு காரணமாக ஜம்ப் கட் ஆகும். எனவே, தேவைக்கு ஏற்ப தளவாடப் பொருள்களை அரசுதான் கொள்முதல் செய்து கொடுக்க வேண்டும்.
பணியாளர் காலியிடங்கள் நிரப்பப்பட்டு, சீரான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, தேவையான தளவாடப் பொருள்கள் இருப்பில் இருந்தால் இந்த பிரச்னை ஏற்படாது.
இந்தப் பிரச்னை எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது?
தளவாடப் பொருள்களே இல்லை என்று சொல்ல முடியாது. போதுமான அளவில் இல்லை, மின் பணியாளர்கள் போதுமான அளவில் பணி நியமனம் செய்யப்பட்டால்தான் தற்போதைய நிலை மாறும்.
ஒரு புத்திசாலித்தனமான அரசு என்ன செய்ய வேண்டும் என்றால், உடனடியாக ஒரு 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஏற்கெனவே அனுபவம் வாய்ந்த ஒப்பந்தப் பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தரகர்கள் இன்றி நேரடியாக பணியமர்த்தி ஊதியம் வழங்கலாம். ஐடிஐ முடித்தவர்கள் 10 ஆயிரம் பேரை பணியமர்த்தினால் மின் தடை பிரச்னைக்கு தீர்வு காணலாம். போதிய பணியாளர்களை நியமிக்காமல், மின் தடைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார் தி. ஜெய்சங்கர்.