சாதனைகளின் நாயகன்
நிகழாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் வைபவ் சூரியவன்ஷி.
நிகழாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் வைபவ் சூரியவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பதினைந்து வயதான இளம் வீரரான இவர், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார்.
கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, ரக்பி, வாலிபால், டென்னிஸ் உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். குறைந்த அளவிலான நாடுகளில் ஆடப்படும் கிரிக்கெட்டுக்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். 2028 லாஸ்ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் இடம் பெறுகிறது.
'இந்திய ப்ரீமியர் லீக்' எனப்படும் (ஐ.பி.எல்.) தொடரை கோடிக்கணக்கானோர் கண்டுகளிப்பதோடு, உலகின் பணக்கார விளையாட்டுத் தொடராகவும் திகழ்கிறது. நிகழாண்டு ஐ.பி.எல். தொடர் இப்போது பாதியளவு முடிந்துள்ளது. இதில் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தவராக வைபவ் சூரியவன்ஷி திகழ்கிறார்.
Advertisement
பிகார் மாநிலத்துக்கு உள்பட்ட சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள மிதிலை பகுதியில் பிறந்த சூரியவன்ஷி , நான்கு வயதில் கிரிக்கெட் மட்டையைத் தொட்டு ஆட ஆரம்பித்தார்.
சிறப்பாக ஆடிய அவரது ஆட்டத்தை அறிந்த தந்தை வாரத்தில் நான்கு நாள்கள் சமஸ்திபூரில் இருந்து 100 கி.மீ. தொலைவுள்ள பாட்னாவுக்கு கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாராவை தனது முன்னோடியாகக் கொண்டுள்ளார் சூரியவன்ஷி. ஐ.சி.சி. யு19 கிரிக்கெட் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார் வைபவ்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்...
ஐ.பி.எல். தொடரில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார் சூரியவன்ஷி . 2024-இல் ஐ.பி.எல். தொடரில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்ட 13 வயது இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ரூ.1.1 கோடிக்கு ஆர்ஆர் அணியால் வாங்கப்பட்டார் வைபவ். ஐ.பி.எல். தொடர் 2008-இல் தொடங்கப்பட்டவுடன் பிறந்த முதல் ஐ.பி.எல். வீரர் என்பதோடு, 2025-இல் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.
2026-இல் தொடரும் சாதனைகள்
ஐ.பி.எல். 2026 தொடரிலும் வைபவ் சூரியவன்ஷியின் சாதனைகள் தொடருகின்றன. 36 பந்துகளில் சதம் அடித்து துரிதமாக சதம் அடித்த மூன்றாவது வீரர், பதினைந்து வயது 29 நாள்களில் டி20-யில் ஆயிரம் ரன்களைக் கடந்த இளம் வீரர் உள்ளிட்ட பெருமைகளைப் பெற்றுள்ளார். 15 பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் அபிஷேக் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 26 ஐ.பி.எல். ஆட்டங்களிலேயே 4 சதங்களை விளாசி உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பலமுறை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் வைபவ். இவர் 473 பந்துகளில் ஆயிரம் ரன்களையும் கடந்தார். இதற்கு முன்பு மிட்செல் ஓவன்533, ஆன்ட்ரு சிம்மன்ஸ் 558 பந்துகளில் 1000 ரன்களைக் கடந்துள்ளனர்.
ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையும், முதல் ஓவரிலேயே 4 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையும் வைபவ் வசம் உள்ளது.