திரைக் கதிர்
நடிகர் விக்ரம், தனது 60-ஆவது பிறந்தநாளன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
நடிகர் விக்ரம், தனது 60-ஆவது பிறந்தநாளன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதை துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார். பிறகு, அந்தக் காணொலி சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது.
அந்தக் காணொளியை கேரள போலீஸார் அவர்களுடைய அதிகாரபூர்வப் பக்கத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு விடியோவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த விடியோவைப் பார்த்த நடிகர் விக்ரம், அதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். "நாங்கள் எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறோம்' என்ற தலைப்புடன் அந்த விடியோவை கேரள போலீஸார் பகிர்ந்துள்ளனர்.
Advertisement
அமீர்கானின் மகன் ஜூனைத் கான் நடிகராக அறிமுகமாகும் "ஏக் தின்' படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமீர்கான், ""இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், இதில் பணியாற்றிய ஒவ்வொருவரும் காட்டிய தீவிரமான உழைப்பு, நேர்மையைக் கண்டு நான் மிகவும் நன்றியோடு உணர்கிறேன். பாடகர் அரிஜித் சிங் இங்கே இல்லாதது குறையாக உள்ளது. அவர் பாடலை மிகவும் அற்புதமாகப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ராம் சம்பத்தும் மிகவும் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார்.
சாய் பல்லவி இதில் மிக அற்புதமான பணியைச் செய்துள்ளார். அவர் செய்திருப்பதைப் பார்த்தால் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள். என் மனதிலிருந்து உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இன்று நம் நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த நடிகை சாய் பல்லவிதான்'' எனப் புகழ்ந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி, சென்னை இ.சி.ஆரில் உள்ள வொண்டர்லாவில் புதிதாக, ஸ்கை வீல் எனப்படும் ஒரு ராட்டினத்தைத் தொடங்கி வைத்தார் ஜி.வி. பிரகாஷ். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ""கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்'' எனப் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாக மேலும் அவர், ""மதுபானங்கள், சூதாட்டம் அல்லது குளிர்பானங்கள் போன்ற மக்களின் உடல்நலத்துக்கும், வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை.
இதற்கு முன் நிறைய குளிர்பானங்களுக்கு விளம்பரம் செய்யக் கூப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு பெரிய தொகையைச் சம்பளமாக வழங்க முன்வந்தாலும், அதில் நான் நடிக்க மாட்டேன். இதுபோல நிறையமுறை நான் நிராகரித்திருக்கிறேன். இந்தப் பொழுதுபோக்கு பூங்கா, குடும்பத்திற்கானது என்பதனால் இங்கு வந்திருக்கிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "கர'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் "கர' படத்தின் தெலுங்கு ப்ரி ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், "" இது நான் நடித்த படமோ, விக்னேஷ் ராஜா எடுத்த படமோ, தயாரிப்பாளரின் படமோ கிடையாது. அனைவருக்குமான படம். சமூகத்தின் வெளிப்படாக இது இருக்கும்.'' என்றார்.
இதனை தொடர்ந்து, "மூத்த மகன் யாத்ரா விரைவில் சினிமாவில் அறிமுகமாகப் போகிறாரா?' என்று தனுஷிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "" சூழ்நிலை காரணமாக நான் 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். அவனுக்கு இப்போதுதான் 19 வயதாகிறது. இன்னமும் அவன் எனக்கு ஒரு குழந்தையாகத்தான் தெரிகிறான். அவன் என்னவாகப் போகிறான் என்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறியிருக்கிறார்.