இறுதி நாள்களில் சலீம் குமார் சமூக ஊடகத் தாக்குதலுக்கு ஆளானார்! - கேரள முதல்வர் ஆவேசம்!
மறைந்த நடிகர் சலீம் குமார் மீதான சமூக ஊடகத் தாக்குதலுக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கண்டனம்...
மறைந்த நடிகர் சலீம் குமாரின் இறுதி நாள்களில் அவர் மிகவும் மோசமான சமூக ஊடகத் தாக்குதலுக்கு ஆளானதாக, கேரள முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள திரைப்பட நடிகர் சலீம் குமார், கடந்த ஜூன் 6 அன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் சலீம் குமார் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது சமூக ஊடகங்களில் அவர் மிகவும் மோசமான முறையில் தாக்குதலுக்கு ஆளானதாக, கேரள முதல்வர் சதீசன் இன்று (ஜூன் 10) தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“சலீம் குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, சமூக ஊடகங்களில் அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. ‘அவர் சாகக் கூடாதா?’ என்றெல்லாம் சிலர் கேட்டார்கள். இப்படி தாக்கப்படுவதற்கு அவர் என்ன செய்தார்?
அவர் மறைந்த பிறகும், மிக மோசமான சமூக ஊடகத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இது கேரளத்தில் நடக்கிறதா? இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
கலைஞர்களுக்கு என்று தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன. ஆனால், அரசியல் கருத்துகளுக்காக ஒரு நபர் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொள்வது கேரளத்துக்கு நல்லதல்ல” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கேரள முதல்வர் வி.டி. சதீசனின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் ஆதரவாளருமான நடிகர் சலீம் குமார் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.