கள்ளு கடைத் திறப்புக்கு எதிர்ப்பு! கேரள முதல்வருக்கு 10 வயது சிறுமி கடிதம்!
கேரள மாநிலத்தில் கள்ளு கடைத் திறப்புக்கு எதிராக முதல்வர் வி.டி. சதீசனுக்கு 5-ஆம் வகுப்பு மாணவி கடிதம் எழுதியது குறித்து...
கேரள மாநிலத்தில் குடியிருப்புப் பகுதியில் கள்ளு கடைத் திறப்புக்கு எதிராக மாநில முதல்வர் வி.டி. சதீசனுக்கு 5-ஆம் வகுப்பு மாணவி கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மாரடி ஊராட்சியில் கள்ளு கடைத் திறப்புக்கு அப்பகுதியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கள்ளு கடைக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இவானியா மரியா சஜேஷ் (10) என்ற 5-ஆம் வகுப்பு மாணவியும் தன்னுடைய பெற்றோருடன் கலந்து கொண்டார்.
இந்தப் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாரடி ஊராட்சியில் கள்ளு கடைத் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முதல்வர் வி.டி. சதீசனுக்கு இவானியா கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, மாரடி ஊராட்சிக்குட்பட்ட அவராச்சன் குடியிருப்புப் பகுதியில் கள்ளு கடை திறப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இங்குதான் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடும் பகுதியாக இருந்து வருகிறது. கடந்த சில நாள்களாக, எங்கள் பெற்றோரும் உள்ளூர் மக்களும் இந்த கள்ளு கடைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் உள்ளூர் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் கள்ளு கடைக்காரர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. இதனைக் கண்டதும் எங்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது.
ஆகையால், இந்தப் பகுதியில் கள்ளு கடை அமைக்கப்படக் கூடாது. இதனை வேறோரிடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்களால் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
10-year-old girl writes to Kerala CM V.D. Satheesan opposing the opening of a toddy shop
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.