உள்கட்சி பூசல்? கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று தில்லி செல்கிறார்!
கேரள முதல்வர் வி.டி. சதீசன் தில்லி செல்வது குறித்து...
கேரள முதல்வர் வி.டி. சதீசன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்திக்க வெள்ளிக்கிழமை (மே 22) தில்லி செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், கேரளத்தின் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவியது.
இதனைத் தொடர்ந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் கடந்த மே 18 அன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர்களில் ஒருவரான கே.சி. வேணுகோபாலுக்கு பதிலாக, வி.டி. சதீசன் கேரளத்தின் முதல்வராகத் தேர்வானதில் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு உடன்பாடில்லை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று தில்லி செல்வதாகவும், அங்கு ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்து உரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் முதல்வராகப் பதவியேற்ற ஒரே வாரத்துக்குள் நடைபெறும் வி.டி. சதீசனின் தில்லி பயணம் பெருமளவில் கவனம் பெற்றுள்ளது. ஆனால், கேரள முதல்வரின் தில்லி பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் திட்டமில்லை எனக் கூறப்படுகிறது.