கோயிலுக்குச் செல்வது என் தனிப்பட்ட உரிமை! - குற்றச்சாட்டுக்கு கேரள முதல்வர் பதில்!
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்ததற்கு கேரள முதல்வர் பதில்...
கர்நாடகத்தில் கொல்லூர் மூகாம்பிகை கோயிக்குச் சென்றது தனது தனிப்பட்ட உரிமை என கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறியுள்ளார்.
கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
இதையடுத்து, முதல்வர் சதீசன் மென்மையான ஹிந்துத்துவ கொள்கைகளைக் கொண்டுள்ளதாகவும், அரசு சர்வாதிகாரப் போக்குகளை வெளிப்படுத்தி வருகிறது எனவும் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கேரள முதல்வர் சதீசன், கோயிலுக்குச் செல்வது தனது தனிப்பட்ட உரிமை எனவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் கூறி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, புதன்கிழமை (ஜூலை 15) திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“நான் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்வது எனது தனிப்பட்ட உரிமை. கடவுள் நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கு எனக்கு அரசியலமைப்பின்படி உரிமையுள்ளது.
அதை எப்படி மென்மையான ஹிந்துத்துவம் எனக் கூற முடியும்? நான் கடந்த 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து மூகாம்பிகை கோயிலுக்குச் செல்கிறேன். நான் கொல்லூர் மூகாம்பிகையின் பக்தன். அதைக் கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் முதல்வர் ஆகிவிட்டதால் கோயிலுக்குச் செல்லக் கூடாது என யாராவது சொல்ல முடியுமா? ” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கர்நாடகத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சென்று வழிபாடு செய்ததுடன் வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
Kerala CM V.D. Satheesan has stated that his visit to the Kollur Mookambika Temple in Karnataka was his personal right.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.