முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

29 கி.மீ. கடல் நீச்சல்...

கடலில் நீந்தி சாதனைகள் புரிந்தாலும் உள்ளரங்குகளில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் போட்டியிட எனது வயது அனுமதிக்கவில்லை.

Updated On : 10 மே 2026, 4:15 am IST
பகிர்:

'கடலில் நீந்தி சாதனைகள் புரிந்தாலும் உள்ளரங்குகளில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் போட்டியிட எனது வயது அனுமதிக்கவில்லை. நீச்சல் விதிகளின்படி, தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்க பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் 11 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

இதனால் திறந்தவெளி நீச்சல் போட்டிகளை நோக்கி எனது கவனம் திரும்பியுள்ளது. உலகின் மிகவும் புகழ்பெற்ற திறந்தவெளி நீச்சல் போட்டிகளில் ஒன்றான ஆங்கிலக் கால்வாய் எனது எதிர்கால இலக்காக மாறியுள்ளது'' என்கிறார் இஷாங்க் சிங்.

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கு இடைப்பட்ட 29 கி.மீ. தூரமான பாக் நீர் சந்திப்பைக் குறைந்த நேரத்தில் கடந்த மிகக் குறைந்த வயதுள்ள சிறுவன் என்ற பெருமையை இஷாங்க் சிங் பெற்றுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியைச் சேர்ந்த ஏழு வயதான மூன்றாம் வகுப்பு மாணவரான இவர், நீச்சலடிக்க எடுத்துக் கொண்ட நேரம் ஒன்பது மணி நேரம் 50 நிமிடங்கள்.

Advertisement

Advertisement

2019-இல் பத்து வயதுச் சிறுவனான ஜெய் ஜஸ்வந்த் இதே தூரத்தை, இதே இடத்தில் கடக்க 10 மணி 30 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட சாதனையை இஷாங்க் சிங் முறியடித்துள்ளார். தனது சாதனை குறித்து இஷாங்க் சிங் கூறியது:

'என்னை வீட்டில் 'நீர் சிசு' என்றுதான் அழைப்பார்கள். இரண்டு வயது முதலே நான் நீந்தத் தொடங்கிவிட்டேன். குளங்கள், ஏரிகள், அணைகளில் நீந்துவேன். நீச்சல் எனக்கு விளையாட்டாகவும், உணர்வாகவும் மாறியது. இதனை புரிந்து கொண்ட பெற்றோர் நீச்சலில் என்னை ஊக்கப்படுத்தினர். ராஞ்சி துர்வா அணையில் எனது தீவிரப் பயிற்சி தொடங்கியது.

ராஞ்சி கடலிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், நீச்சல் கற்க அணை நீர்த் தேக்கத்தைத் தேர்ந்தெடுத்தோம். பயிற்சியாளர்கள் அமன் குமார் ஜெய்ஸ்வால், பஜ்ரங் குமார் வழிகாட்டுதலின்படி, விளையாட்டு வீரர்கள் பல ஆண்டுகள் நீந்தி பெறக்கூடிய உடல் வலிமையையும், தாங்கும் திறனையும் நான் வளர்த்துக் கொண்டேன். எனது தாங்கும் திறனை பயிற்சியாளர்கள் கண்காணித்து திருப்திப்பட்டனர். எந்தவித அச்சமும் இளைப்பும் களைப்பும் இன்றி, நீண்ட தூரங்களை நீந்திக் கடக்கும் ஆற்றல் என்னிடம் இருப்பதை உறுதி செய்தனர்.

தெற்காசியாவின் மிகவும் ஆபத்தான திறந்த கடல் வழித்தடங்களில் ஒன்றான பாக் நீர் சந்திப்பு நீரோட்டங்களையும், கடல் பாம்புகளையும் கொண்டது. இந்த இடத்தை மிகக் குறைந்த நேரத்தில் நீந்திக் கடக்க வேண்டும் என்பதற்காக அணை நீர்த் தேக்கத்தில் கடந்த சில மாதங்களாகத் தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் பயிற்சி செய்து வந்தேன்.

தலைமன்னாரிலிருந்து ஏப்ரல் 30-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நீந்தத் தொடங்கினேன். இருண்டு கறுத்த கடல், வானத்தில் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் போன்றவற்றைக் கடந்தேன்.

பத்து மணி நேரம் தொடர்ந்து நீந்தி, 29 கி. மீ. தூரத்தைக் கடந்துவிடுவேன் என்ற நம்பிக்கை பயிற்சியாளர்களுக்கு ஏற்பட்டது. பாக். ஜலசந்தி அலைகள் அதிகமாகக் கொண்டிருக்கும். கொந்தளிப்பாகவும் இருக்கும். மாறிக் கொண்டே இருக்கும் நீரோட்டங்கள், வலுவான அலைகள், அவ்வப்போது தென்படும் ஜெல்லிமீன்கள் போன்றவை அனுபவம் வாய்ந்த நீண்ட தூர அனுபவ மிக்க நீச்சல் வீரர்களுக்கும்கூட சவாலாக, தடைகளாக அமையும்.

தலைமன்னாரிலிருந்து முதல் 15 கி.மீ. தொலைவுக்கு இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் தனுஷ்கோடியை நோக்கி நீந்தினேன். பின்னர், இந்தியக் கடலோரக் காவல் படை என்னைக் கண்காணித்துக்கொண்டது. நீரோட்டம் அதிகம் இருந்தால் உடல் வேகமாக களைப்படையும். நான் சளைக்காமல் நீரோட்டத்தை எதிர்த்து தனுஷ்கோடியை நோக்கி முன்னேறினேன். பிற்பகல் 1:50 மணிக்கு, தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள அரிச்சல்முனையில் கரையேறினேன்'' என்கிறார் இஷாங்க் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments