முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கலைத்திறனில் அசத்தல்!

பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட கலைத்திறன் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்று அசத்தி வருகிறார் இருபத்து இரண்டு வயதான முதுகலை தமிழ் மாணவி நந்தினிதேவி.

Updated On : 31 மே 2026, 1:15 pm IST
பகிர்:

பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட கலைத்திறன் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்று அசத்தி வருகிறார் இருபத்து இரண்டு வயதான முதுகலை தமிழ் மாணவி நந்தினிதேவி.

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியை அடுத்த சின்ன கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர், பெரிய கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் மணியனின் இளைய மகள். தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பேசும் திறன் கொண்ட அவரிடம் பேசியபோது:

'விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனது தந்தை மணியன், தமிழை ஆர்வத்தோடு கற்று, அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

Advertisement

நான் தனியார் பள்ளியில் பயின்றதால், தமிழோடு ஆங்கிலத்திலும் எழுதவும், பேசவும் பயிற்சி பெற்றேன். ஹிந்தியை விருப்பப் பாடமாகப் படித்தேன். பள்ளி விடுமுறையில் கேரளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மலையாளம் பேசுவதற்கும் பயிற்சி பெற்றேன்.

மருத்துவராக வேண்டும் என்ற எனது கனவை கைவிட்டு, முத்தம்பட்டியில் இயங்கும் வைகை தனியார் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றேன். அதே கல்லூரியில் முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன்.

பள்ளி, கல்லூரிகள் அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளேன். தமிழரண் மாணவர் அமைப்பு நடத்திய விநாடி- வினாப் போட்டி, சித்திரைத் திருவிழா பேச்சுப் போட்டி, ராமகிருஷ்ணா மிஷின்ஸும், பெடரல் பேங்க் அசோசியேஷனும் தனித்தனியே நடத்திய பேச்சுப் போட்டிகள், சேலத்தில் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கவிதைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

கல்லூரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறேன்.

எனது கவிதைகள், கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட உள்ளேன். தமிழில் முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியராகப் பணிபுரிந்து, தமிழ் மொழியின் தொன்மையை, பெருமையை, இலக்கண, இலக்கியச் சிறப்புகளை, வருங்கால மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்கிறார் நந்தினிதேவி.

-பெ.பெரியார்மன்னன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.