முகப்பு
தமிழ்மணி

போரால் மூளும் பொருமல்

நாளும் நாளும் போர்ப் பதற்றம் பரவலாக உள்ள இன்றையச் சூழலில் மனிதகுலம் அச்சவிளிம்பில் அல்லாடுகிறது.

Updated On : 13 அக்டோபர் 2024, 8:02 pm IST
பகிர்:

நாளும் நாளும் போர்ப் பதற்றம் பரவலாக உள்ள இன்றையச் சூழலில் மனிதகுலம் அச்சவிளிம்பில் அல்லாடுகிறது. குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தாலும் மறைவிடமான ரகசிய குகைக்குள் இருந்தாலும் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் திறனற்றவர்களாக நாட்டுத் தலைவர்களே கொல்லப்படும் அளவிற்குப் போர் உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஆம்! மூன்றாம் உலகப் போர் மூண்டுவிடுமோ? என மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு உறக்கம் தொலைந்தவர்களாக உலக மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

"மானுடம் வென்றதம்மா' என்ற கம்பரின் மிதவாத உணர்வை விஞ்சிய போர் ஓலம் எந்நேரமும் கேட்டவண்ணமாகவே உள்ளது.

Advertisement

Advertisement

யாரொடும் பகைகொள்ளலன் என்றபின்

போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது

என்ற கம்பரின் கனவு கூடப் பகற்கனவாய்ப் பலிக்காமலேயே நாள், மாதம், ஆண்டுக்கணக்கில் போர் தொடர்ந்து கொண்டே வருகிறது.

சமாதானம் செய்பவன் பாக்கியவான் என்ற பைபிள் வாசகமும் பொருளற்றதாகிவிடும் அளவிற்கு ஐ.நா. சபை அறிவுறுத்தலும் அலட்சியப்பட்டுவிட்டதால் போரின் கொடுமைகளைக் காணும் தொலைக்காட்சியால் உடலுறுப்பின் ஈரக்குலையே நடுங்கி நொறுங்குகிறது. என்னென்னவோ யுகங்களின் போரில் மக்கள் மடிந்தனர் எனப் புராணமாகப் படிப்பதுபோல் கண்கூடாகக் காணும் நிலையில் போர்ப் பிரளயத்தால் உலகம் அழியப் போகிறதோ என எண்ணாமல் இருக்க முடியவில்லை!

ஆமாம்! அந்தக் காலப் பள்ளிப்பாடத்தில் ஐ.நா. சபை என்பது இரு நாடுகளுக்கும் சண்டை மூண்டால் சமாதானம் செய்து வைக்கும் என்பதாகப் படித்ததெல்லாம் பள்ளிப் பாடம் புள்ளிக்குதவாது என்பதாகிவிட்ட நிலையை இன்றைய பாழான போர்ப்பாணி நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

சங்க காலத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடுகையில், "நெடுஞ்செழியனே! உன் ஆற்றலை அறியாத சேரன், சோழன், திதியன், எழினி, எருமை யூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்னும் எழுவர் ஒன்றுகூடி உன்னை எதிர்த்தபோதும், நீ ஒருவனாகவே அவர்தம் நல்வலம் அடங்க எதிர்த்து வென்றாய் என்றால் உன் போர்ப் பெருமிதம் என்னே?' எனப் புறநானூற்றில் (76) வியப்பது போன்ற நிலைதான் இன்றைய இஸ்ரேல்}ஈரான் இரு தரப்பிலும் நிகழ்ந்து கொண்டிருப்பதால், "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்தியற்கை' என்ற புறநானூறு புதுப்பிக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகின்றது.

வில்லும் அம்புமான போர்க் கருவிகளுக்குப் பிறகு அறிவியல் சார்ந்த கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல் எல்லோரையும் கதிகலங்கச் செய்கின்றது. இத்தகு போரின் கொடுமையைப் பரணரின் ஒரு புறநானூற்றுப்பாடலால் (63) அளந்தறிய முடிகின்றது.

சேரமான் நெடுஞ்சேரலாதனும் சோழன் பெருவிறற் கிள்ளியும் நீயா? நானா? என்ற போர் முனைப்பால் மண்ணாசை கொண்டு போரிட்டு மாண்டனர். அவர்தம் தேர், யானை, குதிரை, காலட் படைகளும் மாண்டன. இதனைக் கண்ணுற்ற பரணர், "அழகிய அவர்தம் நாடு இனி என்னாகப் போகிறதோ?' என எண்ணி ஏங்குகிறார் பரணர்.

எனைப்பல் யானையும்... புரவி யெல்லாம்

மறத்தகை மைந்தரொடு ஆண்டுபட் டனவே!

தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்...

ஒருங்கு மாய்ந்தனரே!... நெடுவேல் பாய்ந்தென

வேந்தரும் பொருதுகளத் தொழிந்தனர்! இனியே

என்னாவது கொல்... அவர் அகன்தலை நாடே!

(புறநானூறு 63)

இந்த அவலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாயினும் இன்றும் கண்கூடாகக் காணும் போர் எப்போது ஓயுமோ? எனப் பெருமூச்சு வாங்க வேண்டியதாக உள்ளதன்றோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments