முகப்பு
வெள்ளிமணி

துணையாக நிற்பவர்கள்

ஆண்டுதோறும் செப்டம்பர் 29 அன்று, விண்ணக அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், ரஃபேல் ஆகியோரை சிறப்பிக்க விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள் உலக கத்தோலிக்கர்கள்.

Updated On : 27 செப்டம்பர் 2013, 10:15 am IST
பகிர்:

ஆண்டுதோறும் செப்டம்பர் 29 அன்று, விண்ணக அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், ரஃபேல் ஆகியோரை சிறப்பிக்க விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள் உலக கத்தோலிக்கர்கள். கடவுள் படைத்தவைகளில் சிறந்தவை எனப் போற்றப்படுவோர் வான தூதரும், மனிதரும்தான். நாம் செய்கின்ற நன்மைகளினாலும்,அறச் செயல்களினாலும் பிறரை மகிழ்ச்சிப் படுத்துகின்றபோது நமது வாழ்வின் எல்லா சூழல்களிலும் துணையாக நின்று காப்பவர்கள் அரூபிகளான காவல் தூதர்கள். இவர்களே சம்மனசுகள்(ஏஞ்சல்) எனப்படுவர்.

தூய விவிலியத்தில் தொடக்கம் முதல் வான தூதர்களின் பணிகளை பல இடங்களில் நாம் காணலாம். இறைவன் திருமுன் நிற்கும் ஏழு காவல் தூதர்களுள் முக்கிய மூன்று தூதர்களைப் பற்றியும் காண்போம்.

மிக்கேல் அதிதூதர்: மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு ""கடவுளுக்கு நிகர் யார்?'' என்பது பொருள். இறைவனுக்கு எதிராக சிந்தித்த லூசிபரையும் அவன் தோழர்களையும் அதிதூதர் மிக்கேல் நல்ல தூதர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு அவர்களை நரகத்தில் வீழ்த்தினார். அதனால் தலைமை தூதர் ஆனார். இவரே நம் திருத்தந்தையின் (போப்பாண்டவர்) காவல் தூதரும், நற்கருணையின் பாதுகாவலரும் ஆவார்.

Advertisement

Advertisement

கபிரியேல் அதிதூதர்: கபிரியேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளின் ஆற்றல்'' என்பது பொருள். ஆறுதல் தரும் செய்திகளை விண்ணிலிருந்து மண்ணகத்திற்கு கொண்டு வருபவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவுக்கும், இறைமகன் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளுக்கும் அறிவித்தவர். இவரே நற்செய்தியின் தூதர் எனப்படுபவர்.

ரஃபேல் அதிதூதர்: ரஃபேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுள் குணமளிக்கிறார்'' என்பது பொருள். இவரே நோயாளிகளுக்கும், பயணிகளுக்குமான பாதுகாவலர். நிறைவாக, ""உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக (லூக் 2:14)'' என்று கூறி நமக்கு நிலையான அமைதியைக் கொடுக்க வந்தவர்கள்.

மேலும் "மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:10)'' என்று இறைமகன் கூறுகின்றார். ஆம்! நாம் சாத்தானின் பிடியில் சிக்காமல், நம் பாவங்களிலிருந்து விடுபட்டு மனம் மாறிய பிள்ளைகளாய் மண்ணுலகில் நன்மைகள் செய்கின்றபோதும், அறச்செயல்கள் புரிகின்றபோதும் விண்ணுலகில் மகிழ்ச்சி உண்டாகும். குறிப்பாக நம் நன்மைகள் எனும் அழகான மலர்களால் விண்ணக அரியணையை நம் காவல்தூதர்கள் அலங்கரிப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.