பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட இரண்டரை வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறித்து...
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள் காலை(ஜூன் 15) உயிரிழந்தார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர், 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி சேர்ந்த புதுப்பேட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நேற்று மாலை ஆறு மணிக்கு மேல் காணாமல் போன நிலையில் அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் அவரைத் தேடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள முள் புதர் அருகே சென்ற பெண் ஒருவர் சிறுமி வலியால் முனகுவதை கண்டு அதிர்ந்து அருகில் இருந்தோரை அழைத்துள்ளார்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர்கள் அருகில் இருந்தோரின் உதவியுடன் சிறுமியை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதிப்புக்குள்ளான சிறுமி, சிறிது நேரத்திற்கு முன்பு வட மாநில இளைஞருடன் சென்றதாக தெரிவித்தனர். அந்த நபரை அடையாளம் கண்டு அவர் தங்கி இருந்த பகுதிக்குச் சென்று அவரை பிடித்து சரமாரியாக அடித்து சிவனை சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பிகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சு(19) என்பதும் சிறுமிக்கு பிஸ்கட் வாங்கி தந்து அவரை அழைத்து சென்றதும் தெரியவந்தது.
இந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவரிடம் சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
சிறுமி உயிரிழப்பு
இந்த நிலையில் சிறுமி திங்கள் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சார்ந்த குடும்பத்தாரின் இரண்டரை வயது மகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வட மாநில இளைஞரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பத்து வயது சிறுமியை வட மாநில நபர் பாலில் வன்முறைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஓராண்டு கழித்து மீண்டும் அதே போன்று ஒரு சம்பவம் கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்துள்ளது பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவர் கைது, 3 பேரிடம் விசாரணை
சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.