நல்லன அருளும் நாறும்பூநாதர்
தலவிருட்சமாகக் கொண்டு விளங்கும் தலங்களுள் முக்கியமானவை ..
இறைவன் சுயம்பு மூர்த்தியாய் வெளிப்பட்டது, புண்ணிய நதிக்கரையில் அமைந்தது, 1200 ஆண்டுகளுக்கு மேலான புராதனப் பெருமை கொண்டது எனப் பல சிறப்பு அம்சங்கள் பொருந்தி நிற்கும் திருத்தலம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடை மருதூர்.
மருத மரத்தை வடமொழியில் அர்ச்சுன விருட்சம் என்பர். இதனை தலவிருட்சமாகக் கொண்டு விளங்கும் தலங்களுள் முக்கியமானவை மல்லிகார்ச்சுனம் (ஸ்ரீ சைலம்), மத்தியார்ச்சுனம் (திருவிடை மருதூர்), புடார்ச்சுனம் (திருப்புடை மருதூர்) ஆகிய மூன்று தலங்களாகும்
இவை ஒன்றுக்கொன்று சமமான அம்சங்களைக் கொண்டு விளங்கும் காரணத்தால் முதல்
Advertisement
தலம், இடைத்தலம், கடைத்தலம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், தாமிரவருணி தெற்கிலிருந்து வடக்காகப் பாய்ந்தோடும் பகுதியில் கிழக்குக் கரை மீது ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும் மருதமரச் சோலைகளின் நடுவே அமைந்திருக்கும் திருத்தலமே திருப்புடை மருதூர்.
ஒருமுறை அத்திரி மகரிஷியின் சீடர் பிருங்கி முனிவர் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்தார். பரம்பொருளாகிய ஈசனை துதித்து கடும் தவம் இருக்க ஆரம்பித்தார். இவரது தவத்தை மெச்சிய பார்வதி தேவி, சிவனிடம், "உங்களை துதித்து ஒரு யோகி தவம் இருக்கிறார். அவருக்கு அருள் ஆசி வழங்க வாருங்கள்!'' என்றார். அதற்கு சிவனும் உடன்பட்டு ஆசிரமத்தில் ரிஷப வாகனத்தில் அம்மையப்பராகக் காட்சி கொடுத்தார்.
அந்த சமயம் ஈசனிடம் மட்டுமே அதீத பற்று கொண்ட பிருங்கி முனிவர், ஈசனைக் கண்டதும் அளவில்லா ஆனந்தம் அடைந்து, பார்வதியை தவிர்த்துவிட்டு சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார்.
இதனால் வெகுண்டெழுந்த பார்வதி, திருப்புடை மருதூர் தாமிரபரணி கரை வடபுறம் வந்து நின்று விட்டார். உடனே ஈசன் தன் தலையில் உள்ள கங்கையை இறக்கிவிட்டு, ""பார்வதியின் கோபம் தணித்து இங்கு அழைத்து வா... அது உன் கடன் !'' எனக் கட்டளையிட்டார்.
இதனால் கங்கை நதி மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து தாமிரவருணி நோக்கிப் பாய்ந்தது. பின் உமையை வட்டமிட்டு நின்றது. ஆகவே கடன் பட்ட கங்கை நதி கடனாநதி என்ற பெயரில் திருப்புடை மருதூரில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஐந்து திருச்சுற்றுகளுடன் பெருங்கோயிலாக அமைந்துள்ள இத்தல மூலவர் கருவூர் சித்தருக்கு செவிசாய்ப்பதற்காக சற்றே இடப்பக்கமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறார்.
ஈசனை மான் என நினைத்து அம்பு எய்த களக்காட்டு மன்னன் கதையின் காரணமாக
ஒருபுறம் தழும்புடன் காட்சியளிக்கிறார் இறைவன். எனவே, இத்தல மூலவர் நாறும்பூநாதருக்கு நித்ய திருமஞ்சனத்தின் போது நல்லெண்ணெய் திருக்காப்பு சாத்துபடிக்குப் பதிலாக தொன்றுதொட்டு சந்தனாதித் தைலம் சாத்தும் வழக்கமே இருந்து வருகிறது. நாறும்பூநாதர் நல்லன எல்லாம் அருளும் பெரும் வரப்பிரசாதி.
கோயிலின் சிறப்பம்சம் மாசி மாதம் முழுவதும் சூரிய கிரணங்கள் சுவாமியின் சிரசில் பரவுவதுதான். தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்பாளுக்கு படிப்பாயசம் செய்து, ஏழைகளுக்குத் தருகின்றனர். தாங்களும் அதை உண்டு நோயிலிருந்து நிவாரணம் பெறுகின்றனர்.
சுவாமியின் அருகிலேயே கோமதி என்ற திருநாமத்துடன் அபூர்வ நீலக்கல் திருமேனியுடன் தனி சந்நிதியில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். அம்பிகையின் திருமேனி உளி தீண்டா சுயம்பு திருமேனி. அடியார்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதில் இந்த அம்பிகைக்கு சிறப்பிடம் உண்டு.
இந்தக் கோயிலின் கோபுர உள்புறச் சுவர்களில் தீட்டப்பட்ட பழம்பெரும் ஓவியங்களும் அங்குள்ள அற்புத வேலைப்பாடமைந்த மரச்சிற்பங்களும், கற்சிற்பங்களும் தமிழர்களின் கலைத்திறனுக்குச் சாட்சிகளாக இன்றும் திகழ்கின்றன.
தரிசனத்துக்காக காலை 6.30 முதல் பகல் 11 வரையும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையும் திறந்திருக்கும் திருப்புடை மருதூர் நாறும்பூநாதர் கோயில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
- வெ. கணேசன்