FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!

நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் புதிய பரிசோதனை பற்றி...

Updated On : 25 ஜூன் 2026, 1:33 pm IST
கோப்புப் படம் - ENS
பகிர்:

- உண்ணிகிருஷ்ணன் எஸ்

நுரையீரல் புற்றுநோயை 5 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் வகையில், ஓர் ஆய்வின் மூலமாக ஒரு புதிய பரிசோதனை கண்டறியப்பட்டுள்ளது, மருத்துவ உலகில் முக்கிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய்

உலகளவில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புகளில் நுரையீரல் புற்றுநோய் 4- வது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்துக் காணப்படுகிறது.

Advertisement

Advertisement

நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல் உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டாலும் தற்போது காற்று மாசுபாடும் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது.

அதாவது தில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

கேலரி சோதனை

பல்வேறு வகை புற்றுநோய்களைக் கண்டறிய, ரத்தத்தில் உள்ள டிஎன்ஏவைச் சரிபார்க்கும் ஒரு ரத்தப் பரிசோதனையே 'கேலரி' (Galleri) என்பதாகும். இது ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளைக் கண்டறியும் தன்மை கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இந்த கேலரி சோதனை அதன் முக்கிய இலக்கை அடையாவிட்டாலும் ஆபத்தான, இறுதிக் கட்டத்தில் உள்ள புற்றுநோய்களைக் கண்டறிந்தது உறுதி செய்யப்பட்டது.

கேலரி பரிசோதனைகள்கூட இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளதாக கோழஞ்சேரி எம்.ஓ.எஸ்.சி. மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் ஆலோசகர் டாக்டர் அஜு மேத்யூ கூறுகிறார்.

"சில மருத்துவமனைகள் பெண்களின் மரபணுக்களைக் கொண்டே, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதா என்பதைக் கண்டறிகின்றன. இதன் மூலம் எந்த புற்றுநோய் கட்டியும் தோன்றுவதற்கு முன்பே பரிசோதனையைத் தொடங்க முடியும்" என்றார்.

நுரையீரல் புற்றுநோய் - புதிய பரிசோதனை

ஆனால், பல ஆண்டுகளாக புற்றுநோய் ஏற்பட்டு அது முற்றிய பிறகு அந்த கட்டியை அகற்றும் சிகிச்சை அல்லது வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை செய்து அதனைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோயில் அது சாத்தியமாகியுள்ளது.

14 -புரத அடையாளம் (14 - protein signature) நுரையீரல் புற்றுநோய் பரிசோதனைதான் அதற்கு காரணம். இதன் மூலமாக புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பே அதைக் கண்டறிவது அல்லது தடுத்து நிறுத்த உதவுகிறது.

இந்த புதிய 14 - புரதம் நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை, மற்ற புற்றுநோய் பரிசோதனைகளில் இருந்து வேறுபடுகிறது. நுரையீரலில் உண்டாகும் ஒரு சிறிய பாதிப்பின் மூலமாகவே நாம் ஆரம்ப நிலையை அறிந்துகொள்ள முடியும். நுரையீரலில் சிறிய அளவிலான ஓர் அழற்சிகூட கண்டறியப் படுகிறது. இதனால் எதிர்ப்பு மருந்துகளின் மூலமாக அதனைத் தடுக்க வாய்ப்புள்ளது.

ஆய்வு

ஃபிரான்சிஸ் கிரிக் நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் இணைந்து பிரிட்டனில் சுமார் 48,000 பேரின் ரத்தத்தை பகுப்பாய்வு செய்து அதன் முடிவுகள் 'செல்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த 14-புரதக் குறியீடு, நோய் கண்டறியப்படுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோய் அபாயத்தைக் கணித்தது. புகைப்பிடிக்காதவர்களும் இதில் அடங்குவர்.

காற்று மாசும் காரணம்

காற்று மாசினால் ஏற்படும் நுரையீரல் அழற்சியை இந்த 14 - புரத பரிசோதனை கண்டறிவதுதான் முக்கியமானது.

காற்று மாசு அதிகமுள்ள இடங்களில் வாசிக்கும்போது, அந்த காற்று மாசுபாடு, நுரையீரல் செல்களை இன்டர்லூகின்-1 பீட்டா (IL-18) என்ற புரதத்தை உண்டுபண்ணும் செல்களைத் தூண்டுகிறது. இதனால் உடலில் குறிப்பாக நுரையீரலில் அழற்சியை ஏற்படுத்துகிறது. இந்த அழற்சியைத்தான் புதிய பரிசோதனை முன்கூட்டியே கண்டறிகிறது. ஏனெனில் இந்த அழற்சியை பல ஆண்டுகள் கழித்து, புற்றுநோயாக உருவாக வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அழற்சி இருந்தால்...

புதிய பரிசோதனையின் மூலமாக அழற்சி இருப்பது கண்டறியப்பட்டால்...

இன்டர்லூகின் 1- பீட்டா (IL-1B) எனும் நோயெதிர்ப்பு புரதத்தைத் தடுக்கும் மருந்தை எடுத்துக்கொள்ளும்போது, ​​அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஆனால், இது இன்னும் முழுமையாக மருத்துவப் பயன்பாட்டிற்கு வரவில்லை. அபாயத்திற்கு உட்பட்ட, புற்றுநோய் கட்டிகள் இல்லாத நோயாளிகளுக்கான விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகள் நடைமுறைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பாதிப்பு எந்த நிலையில் உள்ளது?

கிட்டத்தட்ட 70 முதல் 80% நோயாளிகளுக்கு புற்றுநோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. அதனால் அவர்களுக்கு சிகிச்சைக்கான வாய்ப்புகள் குறைகின்றன.

உலகளவில் மார்பகம், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் அனைத்தையும்விட நுரையீரல் புற்றுநோயால் இறப்பு அதிகமுள்ளது.

புற்றுநோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் முன்பே உங்கள் உடலில் பாதிப்பு (அறிகுறிகள்) வரத் தொடங்கியிருக்கும்.

பரிசோதனை

தற்போது நுரையீரல் புற்றுநோய்க்கு சிடி ஸ்கேன் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

புகைப்பிடிக்கும் அல்லது முன்பு அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட 50 முதல் 80 வயதுடையவர்களைக் கண்காணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல புகைப்பிடிக்காதவர்களிடையே 4ல் ஒருவருக்கு புகைப்பிடிக்காமலேயே புற்றுநோய் ஏற்படுகிறது.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் புற்றுநோய்க்கு எதிரான அபாயங்களை எதிர்த்துப் போராடுகிறது. எனினும் இந்தியாவில் புற்றுநோய்கள் பெரும்பாலும் தாமதமாகவே கண்டறியப்படுவதாலும், பெரு நகரங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பரிசோதனைகள் அரிதாகவே இருப்பதாலும் பாதிப்புகள் அதிகம் உள்ளன.

தமிழில்: எம். முத்துமாரி

summary

Lung cancer can be detected 5 years in advance; New 14 - protein signature test found in research

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments