காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு: ஜெர்மனி வலியுறுத்தல்
இந்திய காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு விகிதத்தை அதிகரிக்க வேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தியிருக்கிறது.
இந்திய காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு விகிதத்தை அதிகரிக்க வேண்டுமென ஜெர்மனி வலியுறுத்தியிருக்கிறது.
ஜெர்மன் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் ஆகியோர் பல்வேறு துறையிலான விஷயங்களை விவாதிக்கும் கலந்தாய்வில் பங்குகொண்டனர். அப்போது பேசிய ஜெர்மன் பிரதமர் கூறியது:
இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அளவு அதிகரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமே இல்லை. ஜெர்மன் கார்கள், இதர சேவைகளுக்கு வரி விதிப்பைக் குறைக்க வேண்டியுள்ளது.
Advertisement
27 நாடுகளின் அமைப்பான ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்கும் இடையே தாராளமய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் உள்ள சிக்கல்கள் இன்னும் தீரவில்லை என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியது: இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே சம வாய்ப்புள்ள தாராளமய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்பட வேண்டும்.
இப்போது காப்பீட்டுத் துறையில் உள்ள அன்னிய நேரடி முதலீட்டு விகிதமான 26 சதவீதத்தை 49 சதவீதமாக அதிகரிக்க அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இது தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. காப்பீட்டுத் துறையில் தாராளமய கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்றார்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தாராளமய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அதிகரிப்பு என்னும் அம்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஈரானின் அணு சக்தி சோதனை:
அணு சக்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட ஈரானுக்கு உரிமை உண்டு என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
முன்னதாக, தலைவர்கள் கூட்டத்தில் பேசும்போது, ஈரானின் அணு சக்தி சோதனைகள் பற்றிய பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிப்பதாக ஏஞ்சலா மெர்கெல் கூறினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக மன்மோகன் சிங் கூறியது: அணு ஆயுதப் பெருக்கம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு என்னும் நிலையில் அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடக் கூடாது.
ஆனால் ஆக்கபூர்வமான தேவைகளுக்காக அணு சோதனை நடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. இந்த சிக்கலான விஷயத்தில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறினார்.