இந்தோனேசிய சுரங்க விபத்து: சாவு எண்ணிக்கை 21 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான "பி.டி.ஃப்ரீபோர்ட் இந்தோனேசியா' என்ற தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கம் இந்தோனேசியாவில் செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய இந்தச் சுரங்கத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து 38 சுரங்கத் தொழிலாளர்களுக்கு கடந்த வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது திடீரென சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 4 உடல்கள் மீட்கப்பட்டன.
Advertisement
இதையடுத்து சாவு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பங் உத்தரவின்பேரில் இரண்டு அமைச்சர்கள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.