லீ கெகியாங்கின் இந்தியப் பயணம் வெற்றி: சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்
சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் இந்தியப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து
சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் இந்தியப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
பிரதமர் லீ கெகியாங்கின் மூன்று நாள் அரசு முறை இந்தியப் பயணம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் லீ கெகியாங் மேற்கொண்ட பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
சீனப் பிரதமராக பதவியேற்ற பிறகு லீ கெகியாங் இந்தியாவுக்குத்தான் முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்தப் பயணம் இரு நாடுகளிடையே தொழில், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகள் மேம்பட உதவும் வகையில் இருந்தது.
குறிப்பாக, எல்லைப் பிரச்னை காரணமாக அண்மையில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் பேச்சுவார்த்தையின் மூலம் மிக அமைதியான முறையில் தீர்க்கப்பட்டுள்ளது.
சீன சந்தையில் இந்திய பொருள்களுக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்துள்ள லீ கெகியாங், உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள இரு நாடுகள் இணைந்து செயல்படும்போது அதன் வலிமை உலக அரங்கில் எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார். இவை எல்லாவற்றையுடம் விட, தான் இந்தியாவில் இருந்தபோது தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தது போன்ற உணர்வைப் பெற்றேன். இந்தியத் தலைவர்களின் உபசரிப்பு அந்த அளவுக்குச் சிறப்புக்குரியதாக இருந்தது என லீ கெகியாங் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் லீ கெகியாங்கின் இந்தியப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார் ஹாங் லீ.
சீனப் பிரதமரின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேலும் வலுப்படும் வகையில் சாதகமாக உள்ளதாக சீனாவின் முன்னணிப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.