தங்கச் சுரங்கத்துக்கு எதிராக போராட்டம்: கிர்கிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்
பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கிர்கிஸ்தானின் சில பகுதிகளில் சனிக்கிழமை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கிர்கிஸ்தானின் சில பகுதிகளில் சனிக்கிழமை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இதற்கான உத்தரவில் அதிபர் அல்மஸ்பெக் அடம்பயேவ் வெள்ளிக்கிழமை இரவு கையெழுத்திட்டார். ""ஜூன் 10ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அதுவரை அவசரநிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கூடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது'' என அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வடபகுதியில் உள்ள இஸிக் குல் மாகாணத்தின் ஜெட்டி-ஒகிஸ்கி மாவட்டத்தில் கும்டோர் தங்கச் சுரங்கம் உள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு முதல் கனடாவைச் சேர்ந்த சென்டெரா கோல்டு நிறுவனம் இந்தச் சுரங்கத்தை நடத்தி வருகிறது.
Advertisement
இந்நிலையில், இந்த தங்கச் சுரங்கத்தை தேசியமயமாக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதில் பாதுகாப்புப் படையினர் உள்பட 55 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 92 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது. 3,000க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், சுரங்க நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அத்துடன், சுரங்கத்துக்கான மின்சாரத்தைத் துண்டித்தனர். இதையடுத்து அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது.