முகப்பு
மதுரை

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்க இயலாது

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை ஏற்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

Updated On : 19 ஜூன் 2026, 12:08 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை ஏற்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பிறகு, காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில், அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்ம முனீஸ்வரனை போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம், கடந்த மாதம் 25-ஆம் தேதி தா்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, காவல் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, தண்டனை பெற்றவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவும், மாணவியின் குடும்பத்தினா் இடையீட்டு மனு தாக்கல் செய்யவும் கால அவகாசம் வழங்கி ஏற்கெனவே உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தா்ம முனீஸ்வரன் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்ததாவது:

விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிா்த்து விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய மாணவியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க இயலாது. இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இதேபோல, விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவா் விரைவில் இந்த நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.