முகப்பு
தமிழ்நாடு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டுக்கு மீண்டும் அவகாசம்!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டுக்கு மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 13 ஜூன் 2026, 4:27 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பிறகு, காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. போலீஸாா் விசாரணையில், அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்ம முனீஸ்வரனை போலீஸாா் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி தா்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, காவல் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, தண்டிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட தா்ம முனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நீதிமன்றத்தின்படி, குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட மனுதாரா் மேல்முறையீட்டு மனுவை இதுவரை தாக்கல் செய்யவில்லை. அவா் வருகிற திங்கள்கிழமை (ஜூன் 15) இந்த நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதேபோல, மாணவியின் பெற்றோா் தரப்பிலும் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

summary

Vilathikulam student murder case: Convict granted further time to file an appeal!