இந்திய ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் உரிமையாளரை சில இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் உரிமையாளரை சில இளைஞர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள பலாரட் நகரில் இந்தியாவைச் சேர்ந்த ஹிமான்ஷு கோயல் (22) என்பவர் நட்சத்திர ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு வெள்ளிக்கிழமை இரவு (உள்ளூர் நேரப்படி) 9.30 மணிக்கு எட்டு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஹிமான்ஷுவைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டினர். இனவெறி ரீதியிலும் அவர்கள் வசைபாடினர். அவர்களில் ஓர் இளைஞர் திடீரென்று ஹிமான்ஷுவின் முகத்தில் ஓங்கிக் குத்தினார். மற்றவர்களும் அவரைத் தாக்கினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஹிமான்ஷு உடனடியாக பலாரட் போலீஸில் புகார் செய்தனர். இது தொடர்பாக விசாரித்து வரும் போலீஸார், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள படங்களை ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் அவர்களைப்பிடித்து விடுவார்கள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement
இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த ஹிமான்ஷு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முகத்தில், குறிப்பாக கன்னப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்னும் 6 வாரங்களுக்குச் சாப்பிட முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை பலாரட் நகர மேயர் ஜான் பர்ட் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, ""நமது நகருக்கு வரும் அனைவரையும் வரவேற்பதில் பலாரட் நகரம் பெருமிதம் கொள்ளும். இப்போது இது போன்ற தாக்குதல் நடந்திருப்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புக்காக நகர மக்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் இருக்கிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபடுவதை நான் உறுதிசெய்வேன். பலாரட் நகரில் நிறவெறியை எதிர்த்து நடவடிக்கை எடுக்க நான் தயாராகி வருகிறேன். நிறவெறி தொடர்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது'' என்று மேயர் தெரிவித்தார்.