காங்கிரஸ் ஆட்சியிலும் வினாத்தாள்கள் கசிந்தன: ராஜஸ்தான் துணை முதல்வர்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக ராஜஸ்தான் துணை முதல்வர் தெரிவித்தது பற்றி...
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி வியாழக்கிழமை (ஜூன் 18) பதிலளித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். இதையடுத்து, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் கசிந்ததாகப் புகார்கள் வந்தன.
இந்தப் புகார்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது.
Advertisement
Advertisement
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட நாட்டின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலோனோர் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும், தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரியும் கோரிக்கை விடுத்தனர். அதேவேளையில், இந்த மறுதேர்வை சரியாக நடத்தி முடிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற மாணவர் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியபோது, இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை "பணம் பறிக்கும் இயந்திரம்" என்று கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து தியா குமாரி பேசுகையில், “இது ஒரு பொறுப்பற்ற பேச்சு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தேர்வுகளிலும் அதிகப்படியான வினாத்தாள்கள் கசிவுகள் ஏற்பட்டன. அதைப்பற்றி ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.