இந்திய பீடி, சிகரெட் விற்கும் இணையதள நிறுவனங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீடி, சிகரெட் பொருள்களை விற்பனை செய்து வரும் 2 இணையதள நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீடி, சிகரெட் பொருள்களை விற்பனை செய்து வரும் 2 இணையதள நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கை நோட்டீஸ் (ஜூலை 26-ம் தேதியிடப்பட்ட) இணையதளங்களுக்கு எஃப்டிஏ அனுப்பியுள்ளது. இது குறித்து எஃப்டிஏ கூறியது: தேஸிஸ்மோக் மற்றும் வான்ட்ஸ்மோக் எனும் இரு இணையங்கள் பீடி, சிகரெட்டுகள், நறுமண பீடி மற்றும் சிகரெட் மற்றும் புகைகுறைவாக வெளிவரும் புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றன.
இந்தப் புகையிலைப் பொருள்களில் பெரும்பாலானவை கலப்படமானதாகும். இப்பொருள்களை விற்க எஃப்டிஏ-வின் அனுமதி வேண்டும். ஆனால், இணையதங்கள் அந்த அனுமதியைப் பெறவில்லை.
Advertisement
அதேபோல், இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்படும் புகைகுறைவாக வெளிவரும் புகையிலைப் பொருள்கள் குறித்து எவ்வித எச்சரிக்கையும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், சட்டப்படி எச்சரிக்கை வாசகம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை நோட்டீஸ் குறித்து 15 நாள்களுக்குள் எழுத்து மூலம் பதில் அளிக்க வேண்டும். சட்ட விதிமீறல்களை திருத்திக் கொண்டு, அமெரிக்காவின் சட்டப்படி புகையிலைப் பொருள்களை விற்க நடவடிக்கை எடுக்குமாறு நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15 நாள்களுக்குள் பதில் அளிக்கத் தவறினால் அபராதம், புகையிலைப் பொருள்களுக்குத் தடை, பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எஃப்டிஏ எச்சரித்துள்ளது. அமெரிக்காவுக்கு பீடி மற்றும் சிகரெட்டுகள் பெரும்பாலும் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதில், அமெரிக்காவில் விற்கப்படும் சிகரெட்டில் இருப்பதைவிட பீடியில் நிக்கோடின், டார் எனப்படும் கரியநிறப் பொருள் மற்றும் கார்பன்டை ஆக்சைடு அதிகளவு உள்ளதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.